முத்தியால்பேட்டையில் கழிவுநீர் வாய்க்காலில் வாலிபர் பிணம், போலீஸ் விசாரணை


முத்தியால்பேட்டையில் கழிவுநீர் வாய்க்காலில் வாலிபர் பிணம், போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 22 April 2019 10:00 PM GMT (Updated: 22 April 2019 7:54 PM GMT)

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணமாக கிடந்தார். அது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுச்சேரி,

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகர் பாப்பம்மாள் கோவிலுக்கு செல்லும் வழியில் கழிவுநீர் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலில் நேற்று சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணமாக கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் முத்தியால்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் கழிவுநீர் வாய்க்காலில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது யாராவது அடித்து கொலை செய்து அவரை அங்கு வந்து போட்டுள்ளனரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story