இலங்கை குண்டு வெடிப்பு எதிரொலி: திருச்சி விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு


இலங்கை குண்டு வெடிப்பு எதிரொலி: திருச்சி விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு
x
தினத்தந்தி 22 April 2019 11:00 PM GMT (Updated: 22 April 2019 8:01 PM GMT)

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக திருச்சி விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

செம்பட்டு,

திருச்சி விமானநிலையத்தில் இருந்து உள்நாட்டு விமானசேவை மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, துபாய், சவுதிஅரேபியா உள்பட பல நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் ஏராளமான பயணிகள் திருச்சி விமானநிலையத்துக்கு வந்து செல்கிறார்கள்.

விமானநிலையத்துக்கு வரும் பயணிகளையும், அவர்கள் கொண்டு வரும் உடைமைகளையும் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை செய்த பிறகே அனுமதிக்கிறார்கள். சுதந்திரதினம், குடியரசு தினம் போன்ற முக்கிய நாட்களில் விமானநிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, பார்வையாளர் மாடமும் மூடப்படும்.

இந்தநிலையில் இலங்கையில் உள்ள கிறிஸ்தவ ஆலயங் கள், ஓட்டல்களில் நேற்று முன்தினம் ஈஸ்டர் பண்டிகையின்போது நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 250-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த சம்பவத்துக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி திருச்சி விமான நிலையத்தில் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். பயணிகள் கொண்டு வரும் பொருட்கள் அனைத்தும் மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் ஸ்கேனிங் எந்திரம் மூலம் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. விமான நிலைய வளாகத்தில் கார்கள் நிறுத்துமிடம் உள்பட பிற இடங்களிலும் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் அவ்வப்போது ரோந்து மேற்கொண்டு மோப்பநாய் உதவியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதேபோல் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திலும், ஸ்ரீரங்கம் கோவில் உள்பட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

Next Story