சினிமா இயக்குனர் அட்லி மீது துணை நடிகை பரபரப்பு புகார்


சினிமா இயக்குனர் அட்லி மீது துணை நடிகை பரபரப்பு புகார்
x
தினத்தந்தி 23 April 2019 11:30 PM GMT (Updated: 23 April 2019 6:56 PM GMT)

இயக்குனர் அட்லி மீது துணை நடிகை ஒருவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.

சென்னை,

நடிகர் விஜய் நடித்த ‘தெறி’, ‘மெர்சல்’ ஆகிய படங்களை இயக்கியவர் அட்லி. ஆர்யா நடித்த ‘ராஜா ராணி’ படத்தையும் இவர் டைரக்ட் செய்துள்ளார். தற்போது நடிகர் விஜய்யின் 63-வது படத்தையும் இயக்கி வருகிறார். அந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை.

இந்தநிலையில், அட்லி மீது துணை நடிகை கிருஷ்ணாதேவி என்பவர், நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நான் நிறைய படங்களில் துணை நடிகை வேடத்தில் நடித்துள்ளேன். தற்போது அட்லி இயக்கும் விஜய்யின் புதிய படத்திலும் நடிக்கிறேன். பூந்தமல்லி பகுதியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. நானும் அந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டேன்.

படப்பிடிப்பு இடைவேளையின்போது, இயக்குனர் அட்லியும், அவருடன் பணியாற்றும் உதவி இயக்குனர்களும் என்னை மிகவும் இழிவுபடுத்தும் வகையில் நடத்தினார்கள். மற்றவர்கள் சாப்பிட்ட உணவை என்னை சாப்பிட சொன்னார்கள். எனக்கு அவர்கள் பெரிய அளவில் தொல்லை கொடுத்தனர். இதனால் மனஉளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்யலாம் என்று நினைத்தேன். எனக்கு தெரிந்தவர்கள் போலீசில் புகார் கொடுக்க அறிவுரை வழங்கினார்கள்.

அதன்பேரில் கமிஷனர் அலுவலகத்தில் மனுகொடுத்துள்ளேன். அட்லி மீதும், அவருடன் பணியாற்றும் உதவி இயக்குனர்கள் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவர் கண்கலங்கினார்.

இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Next Story