பொன்னமராவதி சம்பவம்; குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பெண்கள் துடைப்பத்துடன் பஸ் மறியல்


பொன்னமராவதி சம்பவம்; குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பெண்கள் துடைப்பத்துடன் பஸ் மறியல்
x
தினத்தந்தி 23 April 2019 11:15 PM GMT (Updated: 23 April 2019 7:23 PM GMT)

பொன்னமராவதி சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பெண்கள் துடைப்பத்துடன் பஸ் மறியலில் ஈடுபட்டனர்.

பரமக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் குறிப்பிட்ட சமுதாய பெண்களை தரக்குறைவாக பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனால் அந்த சமுதாய மக்கள் இடையே கொந்தளிப்பு ஏற்பட்டு பல்வேறு வகையான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பார்த்திபனூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட வழிமறிச்சான் கிராம மக்கள் திடீரென பஸ் மறியலில் ஈடுபட்டனர்.

பார்த்திபனூர்–கமுதி செல்லும் சாலையில் 150 பெண்கள் உள்பட 250–க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று திரண்டு துடைப்பம், மிதியடிகளுடன் சுமார் 1 மணி நேரமாக பஸ் மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஒரு குறிப்பிட்ட சமுதாய பெண்களை தரக்குறைவாக பேசி சமூக வலைதளங்களில் பகிர்வு செய்த குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கோ‌ஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பஸ்கள், லாரிகள் உள்பட ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடந்தன.

தகவல் அறிந்ததும் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் பரமக்குடி சங்கர், கமுதி சண்முகசுந்தரம், இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story