நெட்டப்பாக்கத்தில் சிகிச்சைக்கு வந்த ஆண் குழந்தை திடீர் சாவு; ஆம்புலன்ஸ் டிரைவர், ஊழியர்கள் மீது உறவினர்கள் புகார் - மறியல்


நெட்டப்பாக்கத்தில் சிகிச்சைக்கு வந்த ஆண் குழந்தை திடீர் சாவு; ஆம்புலன்ஸ் டிரைவர், ஊழியர்கள் மீது உறவினர்கள் புகார் - மறியல்
x
தினத்தந்தி 23 April 2019 11:15 PM GMT (Updated: 23 April 2019 7:50 PM GMT)

நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு கொண்டுவரப்பட்ட 2 வயது ஆண் குழந்தை திடீரென இறந்தது. ஆம்புலன்ஸ் டிரைவர், ஊழியர்களின் அலட்சியம்தான் இதற்கு காரணம் என புகார் தெரிவித்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

நெட்டப்பாக்கம்,

நெட்டப்பாக்கம் அருகே பனையடிக்குப்பம் வையாபுரி நகரை சேர்ந்தவர் இன்பரசன் (வயது 30). கூலித்தொழிலாளி. இவரது மனைவி முத்தமிழ். இவர்களது 2 வயது ஆண் குழந்தை மித்ரனுக்கு நேற்று முன்தினம் திடீரென வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

இதையடுத்து நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு குழந்தையை கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கரிக்கலாம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து வயிற்றுப்போக்கு சரியானதால் குழந்தையை வீட்டுக்கு கொண்டு வந்தனர்.

அதேநாள் நள்ளிரவில் மீண்டும் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் பதற்றம் அடைந்த பெற்றோர், நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு, புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு குழந்தையை கொண்டு செல்லுமாறு பரிந்துரை செய்தனர். ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் இல்லை என தெரிவித்ததால் 108 ஆம்புலன்சுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அப்போது, நெட்டப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணிநேரமும் இயங்கும் ஆம்புலன்ஸ் இருப்பதால், 108 ஆம்புலன்ஸ் வராது என்று தெரிவித்தனர். மேலும் நெட்டப்பாக்கம் ஆம்புலன்ஸ் டிரைவரின் செல்போன் எண்ணையும் கொடுத்தனர்.

அந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது, ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள ஒரு அறையில் செல்போன் ஒலித்தது. அப்போதுதான் ஆம்புலன்ஸ் இருந்ததை மறைத்து அலைக்கழித்தது குழந்தையின் உறவினருக்கு தெரியவந்தது.

உடனே அந்த அறைக்கு சென்று பார்த்தபோது அங்கு ஆம்புலன்ஸ் டிரைவர் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அவரை தட்டி எழுப்பியபோது வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஒருவழியாக ஒரு மணிநேரம் தாமதமாக ஆம்புலன்சில் குழந்தையை ஏற்றிக் கொண்டு மதகடிப்பட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி குழந்தை இறந்துபோனது.

இதுபற்றி தகவல் அறிந்த இன்பரசனின் உறவினர்கள், கிராம மக்கள் பனையடிக்குப்பத்தில் இருந்து நெட்டப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். ஊழியர்களின் அலட்சியத்தால் தான் குழந்தை இறந்ததாக கூறி ஆஸ்பத்திரிக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை உடைத்து நொறுக்கினர். பின்னர் குழந்தையின் உடலை நெட்டப்பாக்கம் மெயின்ரோட்டில் வைத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்த வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் மற்றும் சுகாதாரத்துறை இயக்குனர் ராமன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவரின் அலட்சியத்தால் தான் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் உறுதி அளித்தார். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்துசென்றனர். இதன்பின் குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மறியலால் புதுச்சேரி - மடுகரை சாலையில் காலை 8 மணி முதல் பகல் 11 மணி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதற்கிடையில் நெட்டப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், நர்சுகள் மற்றும் ஊழியர்கள் தங்களுக்கு பணி பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று கூறி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சுகாதாரத்துறை இயக்குனர் ராமன் ஆகியோர் சமாதானம் பேசினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் நெட்டப் பாக்கத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story