இலவச கட்டாய கல்வி உரிமைசட்டம், சுயநிதி பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் ஆசியா மரியம் தகவல்


இலவச கட்டாய கல்வி உரிமைசட்டம், சுயநிதி பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் ஆசியா மரியம் தகவல்
x
தினத்தந்தி 23 April 2019 10:30 PM GMT (Updated: 23 April 2019 9:31 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீத ஒதுக்கீட்டில் தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவு வகுப்புகளில் குழந்தைகளை சேர்க்க இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல்,

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில், 25 சதவீத ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளை சேர்க்கை செய்ய வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இதன் பொருட்டு அரசால் ஏற்கனவே வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு, 2013-14-ம் ஆண்டு முதல் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த குழந்தைகள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

வருகிற கல்வி ஆண்டிற்கு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 173 சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டின்கீழ் 2,692 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு பள்ளிக் கல்வித் துறையின் இணையதளமான http://rte.tnschools.gov.in/tamilnad என்ற இணைய தளம் வழியாக விண்ணப்பிக்கலாம். வருகிற மே மாதம் 18-ந் தேதி வரை இந்த விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக அனுப்பலாம்.

சம்பந்தப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகங்கள், வட்டாரக் கல்வி அலுவலகங்கள் மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மைய அலுவலகங்களில் இருந்தும், இந்த சட்டத்தின் கீழ் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக அனுப்பலாம். நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிகமான விண்ணப்பங்கள் பெறப்படின், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும்.

விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர் குழந்தையின் புகைப்படம், பிறப்பு சான்று, இருப்பிடச் சான்று, வருமான சான்று (ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு கீழ் உள்ளோர்), வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினருக்கான சான்று ஆகியவை கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

Next Story