தலைஞாயிறு அருகே பயிர்க்காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து விவசாயிகள் உண்ணாவிரதம்


தலைஞாயிறு அருகே பயிர்க்காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து விவசாயிகள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 24 April 2019 11:00 PM GMT (Updated: 24 April 2019 7:14 PM GMT)

தலைஞாயிறு அருகே பயிர்க்காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து விவசாயிகள் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாய்மேடு,

நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் பன்னத்தெரு, திருவிடைமருதூர், ஆய்மூர், நீர்முளை, மணக்குடி உள்ளிட்ட கிராம விவசாயிகளுக்கு 2017-2018-ம் ஆண்டிற்கான பயிர்க்காப்பீட்டு தொகை வழங்காத இன்சூரன்ஸ் நிறுவனத்தை கண்டித்து நீர்முளை ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு விவசாயிகள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு விவசாய நல சங்க தலைவர் வேணுகாளிதாசன் தலைமை தாங்கினார். நீர்முளை விவசாய சங்க தலைவர் ஜோசப், விவசாய சங்க நிர்வாகிகள் கோவிந்தராஜ், மகேந்திரன், விவசாய சங்க தலைவர் ஞானவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் எம்.பி. செல்வராஜ் கலந்துகொண்டு பேசினார். போராட்டத்தில் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் தமிழ்வாணன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் ஜெயபால், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் ராஜேந்திரன், அண்ணாத்துரை உள்பட பலர் கலந்துகொண்டனர்.

2017-18-ம் ஆண்டிற்கான பயிர்க்காப்பீட்டு தொகையை வழங்க மறுக்கும் நியூ இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தையும், அதை பெற்று தர ஆவன செய்யாத மாவட்ட வருவாய்த்துறை நிர்வாகத்தினரை கண்டித்தும், கடந்த 6-ந்தேதி திருக்குவளை தாசில்தார் நடத்திய பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவை அமல்படுத்தாததை கண்டித்தும் போராட்டத்தில் விவசாயிகள் கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருக்குவளை தாசில்தார் கோமதி, தலைஞாயிறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஷ் சந்திரபோஸ், நாகை மாவட்ட இன்சூரன்ஸ் மேலாளர் கணபதி சுப்பிரமணியம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் அடுத்த மாதம் 15-ந்தேதி அனைவருக்கும் பயிர்க்காப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதன்பேரில் விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story