ராட்சத அலையில் சிக்கி இளம்பெண் சாவு இன்னொருவர் கதி என்ன? தேடும் பணி தீவிரம்


ராட்சத அலையில் சிக்கி இளம்பெண் சாவு இன்னொருவர் கதி என்ன? தேடும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 24 April 2019 11:00 PM GMT (Updated: 24 April 2019 8:05 PM GMT)

குமரியில் பேஸ்புக் நண்பர் திருமணத்துக்கு வந்த இடத்தில் ராட்சத அலையில் சிக்கி இளம்பெண் பரிதாபமாக இறந்தார். இன்னொருவரின் கதி என்ன? என்பது தெரியவில்லை. அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கருங்கல்,

குமரி மாவட்டம் குளச்சல் அருகே இனயம்புத்தன்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் வினோபின்ராஜ் (வயது 30). இவருடைய திருமண விழா நேற்று நடைபெற்றது. திருமணத்துக்கு தன்னுடைய பேஸ்புக் நண்பர்களை அழைத்து இருந்தார்.

அதன்படி திருமணத்தில் கலந்து கொள்வதற்காக வினோபின்ராஜின் பேஸ்புக் நண்பர்களான திருப்பூர் மாவட்டம் ஆத்துக்கிணத்துப்பட்டியை சேர்ந்த சங்கீதா (23), சேலம் மாவட்டம் காசி முனியப்பன் தெருவை சேர்ந்த மோகன் (33), ஈரோட்டை சேர்ந்த சாஜித் (30) நெல்லையை சேர்ந்த பாலசுப்புரமணியன் (27), அருப்புக்கோட்டையை சேர்ந்த ஷியாமிளா (28) மற்றும் அவருடைய குழந்தைகள் ஹரிணி (8), கார்த்திகேயன் (3) 7 பேர் நேற்று இனயம் புத்தன்துறைக்கு வந்தனர். அவர்களை வினோபின்ராஜ் அந்த பகுதியில் உள்ள தன்னுடைய உறவினர் வீட்டில் தங்க வைத்தார்.

நேற்று காலை அனைவரும் இனயம்புத்தன்துறை கிறிஸ்தவ ஆலயத்தில் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்டனர். அதன்பிறகு அங்குள்ள கடற்கரையில் நின்று கடல் அழகை ரசித்தபடி கால்களை நனைத்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ராட்சத அலை ஒன்று கரையை நோக்கி வேகமாக வந்தது.

இதை சற்றும் எதிர்பார்க்காத சங்கீதா, மோகன் ஆகிய இருவரும் அலையில் சிக்கினர். 2 பேரையும் கண் இமைக்கும் நேரத்தில் அலை கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதைக்கண்டு அவருடைய நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே இருவரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் சங்கீதா மீட்கப்பட்டார். மோகனை ராட்சத அலை கடலுக்குள் இழுத்துச் சென்றது.

மீட்கப்பட்ட சங்கீதாவை புதுக்கடையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சங்கீதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து குளச்சல் கடலோர காவல் படை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சங்கீதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ராட்சத அலை இழுத்துச் சென்ற மோகன் கதி என்ன? என்பது தெரியவில்லை. மீனவர்கள் உதவியுடன் அவரை தேடும் பணியில் கடலோர காவல்படையினர் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குமரியில் பேஸ்புக் நண்பர் திருமண விழாவுக்கு வந்த இடத்தில் இளம்பெண் ராட்சத அலையில் சிக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story