குள்ளஞ்சாவடி அருகே பெண், விஷம் குடித்து சாவு - தற்கொலைக்கு தூண்டியதாக கள்ளக்காதலன் கைது


குள்ளஞ்சாவடி அருகே பெண், விஷம் குடித்து சாவு - தற்கொலைக்கு தூண்டியதாக கள்ளக்காதலன் கைது
x
தினத்தந்தி 24 April 2019 9:53 PM GMT (Updated: 24 April 2019 9:53 PM GMT)

குள்ளஞ்சாவடி அருகே பெண், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

குறிஞ்சிப்பாடி,

குள்ளஞ்சாவடி அருகே உள்ள தெற்கு பூவாணிக்குப்பம் கொட்டாரமேட்டு தெருவை சேர்ந்தவர் மண்ணாங்கட்டி மகன் நடராஜன் (வயது 40). இவர் புதுச்சேரியில் ஒரு தனியார் மதுபான பாரில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சந்திரகலா(35). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் சந்திரகலாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த ராஜாங்கம் மகன் வடிவேல்(36) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சந்திரகலா, வடிவேலுவை சந்திப்பதையும், அவருடன் பேசுவதையும் தவிர்த்து வந்தார். இதனால் ஆத்திரமடைந்த வடிவேல், சம்பவத்தன்று சந்திரகலாவை நேரில் சந்தித்து பேசினார். அப்போது உன்னை ஆபாசமாக படம் எடுத்து உள்ளேன். என்னிடம் பேசவில்லை என்றால் அதை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சந்திரகலா, தனது வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சந்திரகலா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரகலாவை தற்கொலைக்கு தூண்டியதாக வடிவேலை கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் இருந்த செல்போனை கைப்பற்றி சோதனை செய்தபோது, அதில் ஆபாசபடம் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. இருப்பினும் வடிவேலிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story