கள்ளத்தனமாக படகு மூலம் கோடியக்கரை வந்த இலங்கை தமிழர் கைது


கள்ளத்தனமாக படகு மூலம் கோடியக்கரை வந்த இலங்கை தமிழர் கைது
x
தினத்தந்தி 25 April 2019 10:15 PM GMT (Updated: 25 April 2019 6:48 PM GMT)

கள்ளத்தனமாக படகு மூலம் கோடியக்கரை வந்த இலங்கை தமிழரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்,

இலங்கை தலைமன்னார் பகுதியை சேர்ந்தவர் செபாஸ்டின். இவருடைய மகன் ரஞ்சித்(வயது 30). இவர், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் நின்று கொண்டிருந்தார். அவரை பட்டுக்கோட்டை போலீசார் சந்தேகத்தின்பேரில் அழைத்து விசாரித்தனர். விசாரணையில் அவர், இலங்கையில் இருந்து கடந்த 19-ந் தேதி நாகை மாவட்டம் கோடியக்கரைக்கு கள்ளத்தனமாக படகு மூலம் உரிய ஆவணங்கள் இன்றி வந்ததும், தஞ்சை கீழவாசலை சேர்ந்த பாரூக் என்பவரை சந்தித்து பேசியதும் தெரிய வந்தது.

அவர் அளித்த தகவலின் பேரில் பாரூக்கை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் பட்டுக்கோட்டையில் வைத்து விசாரிக்கப்பட்ட ரஞ்சித்தை நேற்று காலை தனிப்படை போலீசார் தஞ்சைக்கு அழைத்து வந்தனர். இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்தனர். அப்போது திருச்சியில் உள்ள ஒரு நபரை சந்தித்ததாக ரஞ்சித் கூறினார். இதனால் இருவரையும் அழைத்துக் கொண்டு திருச்சிக்கு சென்ற போலீசார், அந்த நபரை தேடினர். ஆனால் போலீசார் தன்னை தேடி வருவதை அறிந்த அவர் தலைமறைவாகி விட்டார்.

இந்த நிலையில் ரஞ்சித் எதற்காக தமிழகத்திற்கு வந்தார்? என பல்வேறு கோணங்களில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இது குறித்து தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கூறியதாவது:-

கடந்த 2013-ம் ஆண்டில் பாரூக், இலங்கைக்கு சென்று ஜவுளி வியாபாரம் செய்துள்ளார். அப்போது ரஞ்சித்துடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. தஞ்சையில் தான் பெரிய பணக்காரன் என்றும், தன்னால் எந்த வேலையையும் எளிதாக முடிக்க முடியும் எனவும் கூறியுள்ளார். இதை ரஞ்சித் உண்மையென நம்பி இருந்தார். இந்த நிலையில் இலங்கையில் ரஞ்சித்துக்கு சரிவர வேலையில்லாத காரணத்தினால் தஞ்சைக்கு வர முடிவு செய்தார்.

இதற்காக திருச்சியில் உள்ள ஒரு ஏஜெண்டை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதன்படி அவரும் படகில் அழைத்து வந்து பாரூக்கை சந்திக்க வைத்துள்ளார். இங்கே வந்த பிறகு தான் பாரூக் கூறியது எல்லாம் பொய் என்பது ரஞ்சித்துக்கு தெரிய வந்தது. இதையடுத்து கன்னியாகுமரி அகதி முகாமில் தங்கியுள்ள தனது மாமன் மகளை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய ரஞ்சித், தஞ்சைக்கு வரும்படி கூறியுள்ளார். அதற்கு அவர், தான் சம்பளம் வாங்கிக்கொண்டு வருவதாக கூறியுள்ளார்.

அதுவரை பாதுகாப்பாக தஞ்சையில் இருக்க முடியாது என முடிவு செய்த ரஞ்சித், இலங்கையில் உள்ள ஒருவரை தொடர்பு கொண்டு தன்னை எப்படியாவது மீண்டும் இலங்கைக்கு அழைத்து செல்லும்படி கூறியுள்ளார். இலங்கையில் உள்ளவர் அங்கிருந்து ரஞ்சித் பற்றிய தகவலை தமிழக போலீசாருக்கு தெரிவித்ததால் அவர் போலீசாரிடம் வசமாக சிக்கிக்கொண்டார். பாஸ்போர்ட் உள்ளிட்ட எந்த ஆவணமும் அவரிடம் இல்லை. இதைத்தவிர வேறு எதை பற்றியும் அவர் தெரிவிக்க மறுத்து விட்டார்.

இவ்வாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கூறினார்.

இதைத்தொடர்ந்து ரஞ்சித், பாரூக் ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார், பட்டுக்கோட்டை நகர போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து ரஞ்சித் மீது இந்திய பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் பட்டுக்கோட்டை நகர போலீசார் நேற்று இரவு வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பாரூக்கிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story