திருத்துறைப்பூண்டியில் பரிதாபம்: சுவரில் மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி


திருத்துறைப்பூண்டியில் பரிதாபம்: சுவரில் மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி
x
தினத்தந்தி 25 April 2019 10:15 PM GMT (Updated: 25 April 2019 7:02 PM GMT)

திருத்துறைப்பூண்டியில் சுவரில் மோதி மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பொன்னையன் செட்டி தெருவை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் பாரதி(வயது 20). இவர் டிப்ளமோ படித்து விட்டு 10 நாட்களில் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல தயாராகி வந்தார்.

இந்த நிலையில் நேற்று இவர் திருத்துறைப்பூண்டி அண்ணாசிலை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பவுண்டடி தெரு அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக பாரதி ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள், அங்கு உள்ள ஒரு வீட்டின் சுவரில் மோதியது.

சம்பவ இடத்தில் பலி

இதில் தலையில் படுகாயம் அடைந்த பாரதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்கார்த்திகுமார், இன்ஸ்பெக்டர் அன்பழகன், சப்-இன்ஸ்பெக்டர் வாகீஸ்வரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story