வேடசந்தூர் அருகே பரிதாபம், ஆட்டை காப்பாற்ற முயன்ற கல்லூரி மாணவி கிணற்றில் தவறி விழுந்து பலி - பெற்றோர் கதறல்


வேடசந்தூர் அருகே பரிதாபம், ஆட்டை காப்பாற்ற முயன்ற கல்லூரி மாணவி கிணற்றில் தவறி விழுந்து பலி - பெற்றோர் கதறல்
x
தினத்தந்தி 26 April 2019 10:45 PM GMT (Updated: 26 April 2019 5:04 PM GMT)

வேடசந்தூர் அருகே ஆட்டை காப்பாற்ற முயன்ற கல்லூரி மாணவி கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார். அவருடைய உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.

வேடசந்தூர்,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தண்ணீர்பந்தம்பட்டியை சேர்ந்தவர் ரெங்கசாமி.விவசாயி. இவருடைய மனைவி சித்ரா. இவர்களுடைய மகள் மல்லீஸ்வரி (வயது 21). இவர், பாளையத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் வீட்டில் இருந்து வந்தார்.

நேற்று காலை தனது வீட்டில் வளர்த்து வந்த ஆடு ஒன்று அங்குள்ள கிணற்றின் அருகே மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது ஆடு கிணற்றில் விழுந்து விடும் என நினைத்து, அதனை காப்பாற்ற மல்லீஸ்வரி ஓடிசென்று விரட்ட முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக மல்லீஸ்வரி கிணற்றில் தவறி விழுந்தார்.

90 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் தண்ணீர் இல்லை. இதனால் பலத்த காயம் அடைந்த மல்லீஸ்வரி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் பரவியதை அடுத்து பொதுமக்கள் அங்கு திரண்டனர். மேலும் தகவல் அறிந்ததும் வேடசந்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) முத்துக்கிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மல்லீஸ்வரியின் உடலை மீட்டனர்.

மகளின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். அப்போது மாணவியின் பெற்றோர் திடீரென மயங்கி விழுந்தனர். பின்னர் உறவினர்கள் தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிய வைத்தனர். மேலும் ஆம்புலன்சில் வந்த மருத்துவ ஊழியர்கள் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

இதற்கிடையே தகவல் அறிந்து வந்த எரியோடு போலீசார், மல்லீஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்டை காப்பாற்ற முயன்றபோது கிணற்றில் விழுந்து கல்லூரி மாணவி இறந்த சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story