பொன்னமராவதி கலவரத்துக்கு காரணமான அவதூறு ஆடியோ வெளியிட்ட 2 பேர் கைது


பொன்னமராவதி கலவரத்துக்கு காரணமான அவதூறு ஆடியோ வெளியிட்ட 2 பேர் கைது
x
தினத்தந்தி 26 April 2019 11:00 PM GMT (Updated: 26 April 2019 5:25 PM GMT)

பொன்னமராவதி கலவரத்துக்கு காரணமான அவதூறு ஆடியோவை வெளியிட்ட விவகாரத்தில் 2 வாலிபர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அதில் கைதான ஒருவர் சிங்கப்பூரில் இருந்து சமூக வலைத்தளத்தில் ஆடியோவை பதிவு செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

புதுக்கோட்டை,

தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியின் சுயேச்சை வேட்பாளர் செல்வராஜையும், அவர் சார்ந்த சமூகத்தையும் 2 பேர் அவதூறாக பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. இந்த ஆடியோவில் உள்ள 2 பேரையும் கைது செய்ய வேண்டும் எனக்கூறி கடந்த 18-ந் தேதி இரவு அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் நடவடிக்கை எடுக்க தாமதம் ஆனதால், அவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் 19-ந் தேதி காலையில் மீண்டும் அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினார்கள். இதனால் பொன்னமராவதியில் பயங்கர கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் 6 போலீஸ் வாகனங்கள் கல்வீசி தாக்கப்பட்டன. மேலும் 3 போலீசார் உள்பட 13 பேர் காயமடைந்தனர்.

இதைத்தொடர்ந்து பொன்னமராவதி தாலுகா பகுதியில் மட்டும் 19-ந் தேதி முதல் 21-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.

இதற்கிடையில், பொன்னமராவதி திருக்களம்பூர் கருப்புக்குடிப்பட்டியை சேர்ந்த கருப்பன் என்பவர் அவதூறு ஆடியோ வெளியிட்டவர்களை கைது செய்ய கோரி பொன்னமராவதி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். புதுக்கோட்டை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் இளங்கோ, அன்பழகன் ஆகியோர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவதூறு ஆடியோ வெளியிட்டவர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மஞ்சவயல் கரிசல்காடு பகுதியை சேர்ந்த கணேசன் மகன் செல்வக்குமார் (வயது 34) என்பவர் சிங்கப்பூரில் இருந்து அவதூறு ஆடியோவை வெளியிட்டது தெரியவந்தது. தனிப்படை போலீசார் அவரை சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வரவழைத்து நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் அவரை புதுக்கோட்டைக்கு அழைத்து வந்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கு தொடர்பாக பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த சந்திரசேகர் மகன் வசந்த் (30) என்பவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட செல்வக்குமார் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், நான் கடந்த சில ஆண்டுகளாக சிங்கப்பூரில் தங்கி வேலை செய்து வருகிறேன். தனது சமுதாயத்தை சேர்ந்த சிங்கப்பூரில் வேலை செய்யும் தனது நண்பர்களுடன் சேர்ந்து, அவர்களுடைய ஆலோசனையின்பேரில் கடந்த 14-ந் தேதி மாலை சிங்கப்பூர் வெஸ்ட் லைட் பகுதியில் இருந்து சர்ச்சைக்குரிய அவதூறு ஆடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தேன். பின்னர் அந்த ஆடியோவை எனது நண்பர்களுக்கு அனுப்பினேன். அந்த ஆடியோ பதிவு கடந்த 17-ந் தேதி காலை முதல் தஞ்சாவூர், சேதுபாவாசமுத்திரம் பகுதியை சேர்ந்த ஒரு நபர் மூலம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டது. இத்தகைய ஆடியோ தனது சமுதாயத்தில் ஒரு பற்று உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தயாரித்து வெளியிடப்பட்டது, என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட செல்வக்குமார், வசந்த் ஆகியோர் நேற்று இரவு திருமயம் குற்றவியல் மற்றும் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவரையும் அடுத்த மாதம் (மே) 10-ந்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி முகமதுஅலி உத்தரவிட்டார்.

Next Story