இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி: திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை


இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி: திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை
x
தினத்தந்தி 27 April 2019 10:24 PM GMT (Updated: 27 April 2019 10:24 PM GMT)

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை செய்தனர்.

திண்டுக்கல்,

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈஸ்டர் பண்டிகையன்று இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இதில் ஏராளமானவர்கள் பலியானார்கள். மேலும் சில இடங்களில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த சம்பவத்தின் எதிரொலியாக தமிழகத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி, தெலுங் கானா உள்ளிட்ட மாநிலங் களில், முக்கிய நகரங்களில் குண்டுவெடிக்கும் என்றும், நாசவேலை செய்வதற்காக ராமநாதபுரத்தில் 19 பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனர் என்று தகவல் கிடைத்தது. மேலும் அவர்கள் தென்னக ரெயில்களில் குண்டு வெடிக்க திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் குண்டுவெடிக்கும் என்றும் பெங்களூரு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போனில் தொடர்பு கொண்டு மர்ம நபர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள பஸ்நிலையங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் ரெயில் நிலையங்கள் என அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டுகள் உள்ளதா என ‘மெட்டல் டிடெக்டர்‘ கருவியை கொண்டு ரெயில்வே போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் நெல்லை- ஈரோடு பயணிகள் ரெயிலில் வந்த பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை ‘மெட்டல் டிடெக்டர்‘ கருவி மூலம் சோதனை செய்தனர். திண்டுக்கல் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதாதேவி தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

Next Story