காவேரிப்பாக்கம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை
காவேரிப்பாக்கம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக ராணிப்பேட்டை உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
பனப்பாக்கம்,
காவேரிப்பாக்கத்தை அடுத்த அய்யன்பேட்டை சேரி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 35), தொழிலாளி. இவரது மனைவி சத்தியா (28). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் சத்தியா ராணிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
சத்தியா வேலைக்கு செல்வது அண்ணாமலைக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் கணவன் - மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த சத்தியா தூக்குப்போட்டு கொண்டார்.
இதனை பார்த்ததும் அண்ணாமலை உடனே சத்தியாவை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி வழக்குப்பதிவு செய்தார்.
தற்கொலை செய்துகொண்ட சத்தியாவுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story