வீரபாண்டி பகுதியில், பெண்களிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் பிடிபட்டனர்


வீரபாண்டி பகுதியில், பெண்களிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் பிடிபட்டனர்
x
தினத்தந்தி 28 April 2019 10:30 PM GMT (Updated: 28 April 2019 11:15 PM GMT)

வீரபாண்டி பகுதியில் பெண்களிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

உப்புக்கோட்டை,

வீரபாண்டி அருகே உள்ள தாடிச்சேரி மேற்கு காலனியை சேர்ந்தவர் காண்டிபன். இவருடைய மனைவி ரஞ்சனி(வயது 40). இவர் கடந்த 14-ந்தேதி கணவர் மற்றும் மகன் ரூபேசுடன் கொடுவிலார்பட்டியில் உள்ள கோவிலுக்கு சென்றார். பின்னர் அவர்கள் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருக்கும்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் ரஞ்சனி கழுத்தில் அணிந்திருந்த 5½ பவுன் சங்கிலியை பறித்து சென்று விட்டனர்.

இதேபோன்று கடந்த 15-ந்தேதி வீரபாண்டி அருகே உள்ள முத்துதேவன்பட்டி முருகன் கோவில் தெருவில் வசிக்கும் முருகன் தனது மனைவி சுமதியுடன் (38) தேனிக்கு சென்றுவிட்டு போடி விலக்கு அருகே திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது சுமதி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பறித்து சென்றுவிட்டனர்.

தேனி அருகே உள்ள அரண்மனைப்புதூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சென்றாயன். இவருடைய மனைவி பாண்டிச்செல்வி (26). இவர்கள் 2 பேரும் கடந்த 18-ந்தேதி வீரபாண்டி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் பாண்டிச்செல்வி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியை பறித்து சென்றுவிட்டனர். இதே போன்று அன்றைய தினம் முத்துதேவன்பட்டி துர்க்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்த மேகநாதன், தனது மனைவி லோகுகவிதாவுடன் (24) வீரபாண்டி அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார்சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள் லோகுகவிதா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்து சென்றுவிட்டனர்.

இந்த தொடர் நகைபறிப்பு சம்பவங்கள் தொடர்பாக கொடுக்கப்பட்ட புகார்களின்பேரில் வீரபாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோக் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது நகைபறிப்பு சம்பவங்களில், வீரபாண்டி அருகே உள்ள காமாட்சிபுரம் சந்தனமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வம் மகன் சந்தோஷ் மற்றும் (20) அதே பகுதியை சேர்ந்த சேகர் மகன் அர்ஜூன் (25) ஆகியோர் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரஞ்சனி உள்ளிட்ட 4 பெண்களிடம் இருந்து பறிக்கப்பட்ட 18½ பவுன் நகைகளும் மீட்கப்பட்டது.


Next Story