பெரம்பலூரில் பெண்களுக்கு பாலியல் கொடுமை என்று பொய்யான புகார் கொடுத்த வக்கீல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்


பெரம்பலூரில் பெண்களுக்கு பாலியல் கொடுமை என்று பொய்யான புகார் கொடுத்த வக்கீல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 29 April 2019 11:00 PM GMT (Updated: 29 April 2019 7:52 PM GMT)

பெரம்பலூரில் பெண்களுக்கு பாலியல் கொடுமை என்று பொய்யான புகார் கொடுத்த வக்கீல் மீது நடவடிக்கை எடுக்க கோரி அ.தி.மு.க. மகளிரணியினர், வக்கீல்கள் நலச்சங்கத்தினர் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்தனர்.

பெரம்பலூர்,

பொள்ளாச்சியை போன்று, பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் வேலை வாய்ப்பு மற்றும் இதர பிரச்சினைகளுக்காக தங்களை தேடி வரும்போது ஆசைவார்த்தை கூறி, அவர்களை அ.தி.மு.க. முக்கிய பிரமுகர் மற்றும் சிலர், போலி பத்திரிகையாளர் ஒருவர் உதவியுடன் பாலியல் தொந்தரவு செய்ததாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், வக்கீலுமான அருள் கடந்த 21-ந் தேதி பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் ஒரு புகார் கொடுத்தார். இந்த புகார் தொடர்பாக பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வக்கீல் அருள் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், மேற்கண்ட புகார் தொடர்பாக தன்னுடன் செல்போனில் பேசிய ஆடியோவினை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியதோடு மட்டுமின்றி, பாதுகாப்பு கேட்டும் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் மனு கொடுத்திருந்தார்.

வக்கீல்கள்-அ.தி.மு.க. மகளிரணியினர் புகார்

இந்த புகார் எந்தவித அடிப்படை ஆதாரங்களும் இன்றி உள்ளதாகவும், புகார் கொடுத்த வக்கீல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. வக்கீல் அணியினரும் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் மனு கொடுத்திருந்தனர். இந்த நிலையில் பெரம்பலூர் வக்கீல்கள் நலச்சங்கத்தை சேர்ந்த வக்கீல்கள் நேற்று பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தலிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில், வக்கீல் ஒருவர் அ.தி.மு.க. முக்கிய பிரமுகர்களை பற்றி எந்தவித அடிப்படை ஆதாரங்களும் இன்றி ஆடியோ ஒன்றை வெளியிட்டு, தவறான செய்தியையும் பரப்பி வருகி றார். அந்த வக்கீல் மீது பல்வேறு புகார்கள் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. அவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் ஏன்? இன்னும் போலீசார் விசாரணையில் ஆஜராகவில்லை. அ.தி.மு.க. பிரமுகர் ஒரு பட்டியலின வகுப்பை சேர்ந்தவர் என்பதால், அவரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தி, அவர் மீது திட்டமிட்டு அடிப்படை ஆதாரமற்ற பொய் செய்திகளை பரப்பி வரும் அந்த வக்கீல் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதேபோல் அ.தி.மு.க. பிரமுகர் மீது பொய்யான பாலியல் புகார் கொடுத்த வக்கீல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. மகளிரணியினரும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். 

Next Story