மும்பையில் 55 சதவீதம் வாக்குப்பதிவு : குடிசைப்பகுதி மக்கள் ஆர்வமாக வந்து ஓட்டுப்போட்டனர்


மும்பையில் 55 சதவீதம் வாக்குப்பதிவு : குடிசைப்பகுதி மக்கள் ஆர்வமாக வந்து ஓட்டுப்போட்டனர்
x
தினத்தந்தி 30 April 2019 12:18 AM GMT (Updated: 30 April 2019 12:18 AM GMT)

மராட்டியத்தில் இறுதிக்கட்ட நாடாளுமன்ற தேர்தல் அமைதியாக நடந்தது. மும்பையில் 55 சதவீத வாக்குகள் பதிவானது. குடிசைப்பகுதிகளில் மக்கள் ஆர்வமாக வந்து ஓட்டுப்போட்டனர்.

மும்பை,

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடக்கிறது. 48 நாடாளுமன்ற தொகுதிகளை கொண்ட இரண்டாவது பெரிய மாநிலமான மராட்டியத்தில் 4 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதில் முதல் கட்டமாக கடந்த 11-ந் தேதி 7 தொகுதிகளுக்கும், 18-ந் தேதி 10 தொகுதிகளுக்கும், 23-ந் தேதி 14 தொகுதிகளுக்கும் என மொத்தம் 31 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்தது.

நான்காவது மற்றும் இறுதிக்கட்டமாக மும்பையில் உள்ள 6 தொகுதிகள் உள்பட 17 தொகுதிகளில் நேற்று தேர்தல் நடந்தது. இதன்படி வட மும்பை, வடமேற்கு மும்பை, வடகிழக்கு மும்பை, வடமத்திய மும்பை, தென்மத்திய மும்பை, தென்மும்பை, நந்துர்பர், துலே, தின்டோரி, நாசிக், பால்கர், பிவண்டி, கல்யாண், தானே, மாவல், சிரூர், ஷீரடி ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது.

323 வேட்பாளர்கள் களத்தில் இருக்கும் 17 தொகுதிகளிலும் வாக்குப்பதிவுக்காக 33 ஆயிரத்து 314 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் ஆயுதம் ஏந்திய போலீசார், துணை ராணுவ படையினர் நிறுத்தப்பட்டு இருந்தனர்.

குறிப்பாக மும்பை மற்றும் தானே மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு அதிக பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

காலையில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் வாக்குச்சாவடிகளில் சென்று தங்கள் வாக்கை பதிவு செய்தனர். மும்பையில் இந்தி திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள், தொழில் அதிபர்கள் என முக்கிய பிரபலங்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.

நாட்டின் நம்பர் 1 பணக் காரர் முகேஷ் அம்பானி மாலையில் தனது மனைவி, மகன், மகளுடன் வந்து ஜனநாயக கடமை ஆற்றினார்.

இளம் வேட்பாளர்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்து ஒட்டுப்போட்டு சென்றதை பார்க்க முடிந்தது. மதிய நேரத்தில் அதிக வெயில் தாக்கம் இருந்ததால், வாக்காளர்கள் வருகை குறைந்தது. இருப்பினும் குடிசை பகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடந்தது. குடிசை பகுதி மக்கள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்து நின்றதை காண முடிந்தது.

பின்னர் வெயில் குறைந்ததை தொடர்ந்து, மாலையில் வாக்குப்பதிவு மீண்டும் விறுவிறுப்பு அடைந்தது. வாக்குப்பதிவு இடைவிடாமல் நடந்தது. எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இல்லாமல் அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்தது.

காலை 11 மணி நிலவரப்படி 18.39 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. மதியம் 1 மணி வரை 31.74 சதவீதம், பிற்பகல் 3 மணி வரை 42.3 சதவீதம், மாலை 5 மணி வரை 52.07 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.

ஓட்டுப்பதிவு மாலை 6 மணியுடன் முடிந்தது. தேர்தல் நடந்த 17 தொகுதிகளிலும் 57 சதவீதம் வாக்குகள் பதிவாகியதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதில் மும்பையில் உள்ள 6 தொகுதிகளிலும் மொத்தம் 55 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த 2014 தேர்தலின் போது மும்பையில் உள்ள தொகுதிகளில் 53 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மராட்டியத்துடன் நான்கு கட்டமாக நடந்த நாடாளுமன்ற தேர்தல் நேற்றுடன் முடிந்தது. 48 நாடாளுமனற் தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 60.68 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், நேற்று தேர்தல் நடந்த 17 தொகுதிகளிலும் வாக்குகள் பதிவான மின்னணு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு மின்னணு எந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. அந்த மையங்களுக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் மே 23-ந் தேதியன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அப்போது மராட்டியத்தின் 48 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

Next Story