தஞ்சை-திருச்சி இடையே சோதனை ஓட்டம் முடிந்த பிறகும் தாமதமாகும் மின்சார ரெயில் சேவை


தஞ்சை-திருச்சி இடையே சோதனை ஓட்டம் முடிந்த பிறகும் தாமதமாகும் மின்சார ரெயில் சேவை
x
தினத்தந்தி 30 April 2019 11:00 PM GMT (Updated: 30 April 2019 8:27 PM GMT)

தஞ்சை-திருச்சி இடையே சோதனை ஓட்டம் முடிந்த பிறகும் மின்சார ரெயில்சேவை தாமதம் ஆகிறது. தஞ்சையில் துணை மின் நிலையம் அமைக்கும் பணி முடிய மேலும் 6 மாதமாகும் என்ற தகவல் கிடைத்துள்ளது.

தஞ்சாவூர்,

திருச்சி-காரைக்கால் இடையே தஞ்சை, திருவாரூர், நாகை வழியாக மின் மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருச்சியில் இருந்து தஞ்சை வரை ஒரு கட்டமாகவும், தஞ்சையில் இருந்து காரைக்கால் வரை ஒரு கட்டமாகவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த வழித்தடத்தில் 15-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களும், 20-க்கும் மேற்பட்ட பயணிகள் ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்காக தஞ்சை, திருவாரூர், காரைக்கால் ஆகிய இடங்களில் துணை மின் நிலையங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் மொத்த தூரம் 153 கி.மீ. ஆகும். இதில் தஞ்சை-திருச்சி இடையே 50 கிலோ மீட்டர் தூரம் முதல் கட்டமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது முடிவடைந்து விட்டது. இந்த வழித்தடத்தில் இரட்டை ரெயில்பாதை என்பதால் இருவழியிலும் மின்வழிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 2,900 மின் கம்பங்கள் நடப்பட்டுள்ளன.

முதலில் திருச்சி பொன்மலையில் இருந்து ஆலக்குடி வரையும், பின்னர் ஆலக்குடியில் இருந்து தஞ்சை வரையும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தஞ்சை-திருச்சி இடையே பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி தஞ்சை-திருச்சி இடையே மின்சார ரெயில் சோதனை முறையில் இயக்கப்பட்டது.

தஞ்சை துணை மின் நிலையம் பயன்பாட்டுக்கு வராததால் திருச்சி பொன்மலையில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் எடுக்கப்பட்டு ரெயில் சோதனை முறையில் இயக்கி பார்க்கப்பட்டது. இந்த ரெயில் தஞ்சையில் இருந்து 35 நிமிடத்தில் திருச்சி சென்றது. சோதனை ஓட்டம் நடைபெற்ற அன்று தஞ்சை-திருச்சி இடையே 2 மணி நேரம் பொதுமக்கள் ரெயில் தண்டவாளத்தை கடக்கவும் தடை விதிக்கப்பட்டது.

முதலில் தஞ்சை-திருச்சி இடையே மின்சார ரெயில் சேவை செப்டம்பர் மாதமும், பின்னர் டிசம்பர் மாதமும் செயல்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் சோதனை ஓட்டம் நடைபெற்ற 20 நாளில் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சோதனை ஓட்டம் முடிந்து 1 மாதத்திற்கு மேல் ஆகியும் இன்னும் மின்சார ரெயில் இயக்கப்படவில்லை.

தஞ்சை-திருச்சி இடையே தற்போது எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 45 நிமிடத்திலும், பயணிகள் ரெயில் 55 நிமிடத்திலும் சென்று வருகின்றன. மின்வழிப்பாதையில் ரெயில்கள் இயக்கப்பட்டால் எக்ஸ்பிரஸ் ரெயில்கள்(தஞ்சை-திருச்சி இடையே எந்த ரெயில் நிலையத்திலும் நிற்காத ரெயில்கள்) 35 நிமிடத்திலும், பயணிகள் ரெயில் 45 நிமிடத்திலும் செல்லும். இது பயன்பாட்டிற்கு வந்தால் எர்ணாகுளத்தில் இருந்து காரைக்கால் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் தஞ்சை வரை மின்பாதையில் இயக்கப்படும் எனவும் கூறப்பட்டது.

ஆனால் தற்போது மின்சார ரெயில் சேவை பயன்பாட்டிற்கு வர இன்னும் 6 மாதத்துக்கு மேல் ஆகும் என கூறப்படுகிறது. தஞ்சையில் துணை மின் நிலையம் அமைக்கும் பணிகள் மந்தமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முடிவடைய மேலும் 6 மாதமாகும் என தகவல் கிடைத்துள்ளது. இது பயன்பாட்டுக்கு வந்தால் தான் மின்சார ரெயில்சேவை இயக்கப்படும் என கூறப்படுகிறது.

மேலும் தஞ்சையில் இருந்து காரைக்கால் வரையிலான மின் மயமாக்கல் பணிகளும் முடிவடையும் தருவாயில் உள்ளன. இந்த பகுதியில் துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே திருச்சி- காரைக்கால் இடையே ஒரே நேரத்தில் மின்சார ரெயில் சேவை இயக்க வாய்ப்பு உள்ளதாக ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story