கபிஸ்தலம் அருகே கடனை திருப்பி கேட்ட முதியவருக்கு அரிவாள் வெட்டு தந்தை, மகன் கைது


கபிஸ்தலம் அருகே கடனை திருப்பி கேட்ட முதியவருக்கு அரிவாள் வெட்டு தந்தை, மகன் கைது
x
தினத்தந்தி 30 April 2019 10:15 PM GMT (Updated: 30 April 2019 9:11 PM GMT)

கபிஸ்தலம் அருகே கடனை திருப்பி கேட்ட முதியவரை அரிவாளால் வெட்டிய தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.

கபிஸ்தலம்,

தஞ்சை மாவட்டம், கபிஸ்தலம் அருகே உள்ள ஈச்சங்குடி எம்.ஜி.ஆர். நகரில் வசிப்பவர் சந்திரன் (வயது69). இவர், ஈச்சங்குடி புது தெருவில் வசிக்கும் பாலன்(50) என்பவரின் மகன் திருமணத்திற்காக கடந்த 1 ஆண்டுக்கு முன்பு ரூ. 1 லட்சம் கடன் கொடுத்துள்ளார். திருமணம் முடிந்ததும் ரூ. 50 ஆயிரத்தை பாலன் திரும்பி கொடுத்துள்ளார். மீதி கொடுக்க வேண்டிய ரூ.50 ஆயிரத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரூ. 50 ஆயிரத்தை சந்திரன் கேட்டுள்ளார்.

அப்போது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. நேற்றுமுன் தினம் இரவு சந்திரனும், அவரது மைத்துனர் ரவி மகன் வினோத் (31) ஆகிய 2 பேரும் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஈச்சங்குடி மெயின் ரோட்டில் நின்று கொண்டிருந்த பாலனும், அவரது மகன் பாபு (25) ஆகியோரும் சேர்த்து மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேரையும் வழிமறித்து அரிவாளால் வெட்டினர்.

2 பேர் கைது

இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனந்த பத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர்கள் வேம்பு, ராகவன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து பாலன், பாபு ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story