சேலத்தில் இளம்பெண் தற்கொலை: உடலை வாங்க மறுத்து அரசு ஆஸ்பத்திரியை உறவினர்கள் முற்றுகை


சேலத்தில் இளம்பெண் தற்கொலை: உடலை வாங்க மறுத்து அரசு ஆஸ்பத்திரியை உறவினர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 30 April 2019 10:36 PM GMT (Updated: 30 April 2019 10:36 PM GMT)

சேலத்தில் இளம்பெண் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

சேலம்,

சேலம் நெத்திமேடு மணியனூரை சேர்ந்தவர் ஹமீம்அலி (வயது 28). கார் டிரைவர். இவரது மனைவி ஹசீபா (26). இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 8 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணம் முடிந்ததில் இருந்து கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் வரதட்சணை கேட்டு ஹமீம்அலி மனைவியை துன்புறுத்தியதாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஹசீபா தூக்கில் பிணமாக தொங்கினார். தகவல் அறிந்த அவரது பெற்றோர் விரைந்து சென்று மகளின் பிணத்தை பார்த்து கதறி அழுதனர். பின்னர் இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஹசீபா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை ஹசீபாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஏராளமானவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, திருமணம் முடிந்ததில் இருந்து ஹசீபாவிடம், அவரது கணவர் மற்றும் பெற்றோர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினர். இதனால் ஹசீபா கோபித்துக்கொண்டு எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வருவார். பின்னர் சமாதானம் செய்து அனுப்பி வைப்போம். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஹசீபாவை பார்ப்பதற்காக அவரது சகோதரர் சென்றார். அப்போது இனிமேல் என் வீட்டிற்கு வரக்கூடாது என்று ஹமீம் அலி சத்தம் போட்டுள்ளார். மேலும் உங்கள் வீட்டில் இருந்து யாரும் என் வீட்டிற்கு வரக்கூடாது என்று மனைவிடம் கூறி உள்ளார். இதனால் ஹசீபா பல வேதனைகளை அனுபவித்து வந்தார்.

எனது மகள் தற்கொலை செய்து கொண்டு இருக்கமாட்டாள். அவளை அவரது கணவர் மற்றும் உறவினர்கள் அடித்து கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறுகின்றனர். எனவே எனது மகள் சாவிற்கு காரணமான ஹமீம்அலி மற்றும் இதற்கு உடந்தையாக இருந்தவர்களை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று கூறினர்.

இதையொட்டி முற்றுகை போராட்டம் நடத்தியவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இருப்பினும் அவர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட மறுத்து விட்டனர். பின்னர் ஹசீபாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிலர் சேலம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் அங்கு வந்த உதவி கலெக்டர் செழியனிடம் முறையிட்டனர்.

அப்போது அவர் ஹசீபாவின் சாவிற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதையொட்டி முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர். இதனால் நேற்று சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இந்த நிலையில் ஹசீபாவின் சாவு, சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story