மனைவியை எரித்துக் கொன்ற கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - வேலூர் கோர்ட்டு தீர்ப்பு


மனைவியை எரித்துக் கொன்ற கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - வேலூர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 30 April 2019 11:02 PM GMT (Updated: 30 April 2019 11:02 PM GMT)

மனைவியை எரித்துக் கொன்ற கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து வேலூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

வேலூர்,

பேரணாம்பட்டு தாலுகா தரைக்காடு பகுதி அலிமஜித் தெருவை சேர்ந்தவர் முகமதுசையது (வயது 32), கூலித்தொழிலாளி. இவருக்கு சமீனா, சுல்தானா (24) என்ற இரு மனைவிகள். முதல் மனைவி சமீனாவுக்கு 12 வயதில் ஒரு மகளும், 10 வயதில் ஒரு மகனும், 2-வது மனைவி சுல்தானாவுக்கு 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். அனைவரும் ஒரே வீட்டில் வசித்தனர்.

முகமதுசையது தனது 2-வது மனைவி சுல்தானாவின் நடத்தையில் சந்தேகம் கொண்டார். இதனால் அவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 29.3.2018 அன்று மீண்டும் அவர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முகமதுசையது, சுல்தானா மீது தீ வைத்து விட்டு தப்பியோடி விட்டார்.

உடலில் தீ பரவியதால் சுல்தானா வலி தாங்காமல் அலறினார். பின்னர் அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு வேலூர் கூடுதல் மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி எஸ்.குணசேகர் நேற்று வழக்கை விசாரித்தார். அரசு தரப்பில் வக்கீல் அ.கோ.அண்ணாமலை ஆஜராகி வாதாடினார்.

வழக்கில் நீதிபதி குணசேகர் தீர்ப்பு கூறினார். அதில், மனைவியை எரித்துக் கொலை செய்த முகமதுசையதுவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும் முகமதுசையதுவின் குழந்தைகள் பாதிக்கப்படுவதால் அவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு கல்வி மற்றும் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு நீதிபதி பரிந்துரை செய்துள்ளார்.


Next Story