பொங்கலூர் அருகே, மின்சாரம் தாக்கி 2 ஆடுகள் செத்தன - விவசாயி படுகாயம்


பொங்கலூர் அருகே, மின்சாரம் தாக்கி 2 ஆடுகள் செத்தன - விவசாயி படுகாயம்
x
தினத்தந்தி 2 May 2019 11:00 PM GMT (Updated: 2 May 2019 8:09 PM GMT)

பொங்கலூர் அருகே மின்சாரம் தாக்கி 2 ஆடுகள் செத்தன. அவற்றை காப்பாற்ற முயன்ற விவசாயி படுகாயம் அடைந்தார்.

பொங்கலூர்,

பொங்கலூர் அருகே உள்ள மந்திரிபாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி(வயது 65). விவசாயியான இவர் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் அங்குள்ள தோட்டத்து பகுதியில் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார். அந்த பகுதியில் காற்றாலைகள் அதிக அளவில் உள்ளதால் மின்சாரம் கொண்டு செல்லும் மின்பாதைகளும் அதிக அளவில் உள்ளன.

இந்த நிலையில் ஆடுகள் மேய்த்து கொண்டிருந்த பகுதியில் பலத்த காற்று வீசியது. அப்போது அந்த வழியாக சென்ற மின் கம்பி அறுந்து ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்த இடத்தில் விழுந்தது. இதில் 2 ஆடுகள் மின்சாரம் தாக்கியதில் கத்தியபடி துள்ளி குதித்து கீழே விழுந்து செத்தன.

சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த ராமசாமி ஆடுகள் மின்சாரம் தாக்கி இறந்ததை அறியாமல் அவர் அங்கு கீழே கிடந்த மின்கம்பியை மிதித்து விட்டார். இதில் மின்சாரம் தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார்.

உடனே அந்த வழியாக சென்றவர்கள் ராமசாமியை மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 

Next Story