அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றால் அரவக்குறிச்சி தொகுதி தன்னிறைவு பெறும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு


அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றால் அரவக்குறிச்சி தொகுதி தன்னிறைவு பெறும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு
x
தினத்தந்தி 2 May 2019 11:00 PM GMT (Updated: 2 May 2019 8:22 PM GMT)

அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றால் அரவக்குறிச்சி தொகுதி தன்னிறைவு பெறும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

அரவக்குறிச்சி,

அரவக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வி.வி.செந்தில்நாதனை ஆதரித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆகியோர் பள்ளப்பட்டி பகுதியில் வாக்கு சேகரித்து வருகின்றனர். முன்னதாக மாற்றுக்கட்சியில் இருந்து ஆண்களும், பெண்களுமாக 650 பேர் விலகி முன்னாள் நகர அ.தி.மு.க. செயலாளர் தோட்டம் அபுதாகீர் தலைமையில் அ.தி.மு.க.வில் இணையும் விழா பள்ளப்பட்டியில் நடைபெற்றது. விழாவில் புதிதாக அ.தி.மு.க.வில் இணைந்தவர்களுக்கு நாடாளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபில், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத் தலைவர் தமிழ்மகன் உசேன், அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆதிராஜாராம் ஆகியோர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

விழாவில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியதாவது;-

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இஸ்லாமிய மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை செய்துள்ளார். அவர் தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றுவேன் என்று கூறி, அதை செய்தும் காட்டினார். தற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் அதைத்தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர்.

தற்போது தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வெற்றி பெற்றால் இந்த தொகுதிப்பக்கம் கூட திரும்பிப்பார்க்க மாட்டார். ஆனால் ஜெயலலிதாவால் அறிமுகம் செய்யப்பட்ட வேட்பாளர் வி.வி.செந்தில்நாதன் வெற்றி பெற்றால் இந்தத்தொகுதி தன்னிறைவு பெறும். பள்ளப்பட்டி இஸ்லாமிய பெருமக்கள் அ.தி.மு.க.விற்கு அதிக அளவு வாக்களித்து செந்தில்நாதனை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அமைச்சர் பி.தங்கமணி பேசுகையில், 2011 அரவக்குறிச்சி சட்டமன்றத் தேர்தலில் செந்தில்நாதன் வெற்றி பெற்றால் தமக்கு அமைச்சர் பதவி கிடைக்காது என்று எண்ணிய செந்தில்பாலாஜி கே.சி.பழனிச்சாமியுடன் சேர்ந்து செந்தில்நாதனை தோற்கடித்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தத்தேர்தலில் செந்தில்நாதனை வெற்றிபெறச் செய்யுங்கள், என்றார்.

விழாவில் தம்பிதுரை பேசுகையில், நாங்கள் வைத்துள்ள கூட்டணி கொள்கைக்காக என்பதைவிட திட்டங்களுக்கான கூட்டணி. இந்த முறை தயவுசெய்து பள்ளப்பட்டி இஸ்லாமியர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து செந்தில்நாதனை வெற்றிபெறச் செய்ய வேண்டுகிறோம், என்றார். 

Next Story