மேட்டூர் அருகே குடிநீர் கேட்டு பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


மேட்டூர் அருகே குடிநீர் கேட்டு பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 3 May 2019 10:00 PM GMT (Updated: 3 May 2019 7:30 PM GMT)

மேட்டூர் அருகே உள்ள பி.என்.பட்டி பேரூராட்சி அலுவலகத்தை குடிநீர் கேட்டு பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

மேட்டூர், 

மேட்டூர் அருகே உள்ளது பி.என்.பட்டி பேரூராட்சி. இங்குள்ள பெரியார் நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். கடந்த சில நாட்களாக இந்த பகுதி மக்களுக்கு சரியாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் குடிநீர் கிடைக்காமல் கடும் சிரமம் அடைந்து வந்தனர்.

எனவே சீராக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி பேரூராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது. இதனால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் பி.என்.பட்டி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அங்கு அதிகாரிகள் யாரும் இல்லை. அவர்கள் அலுவல் பணிக்காக வெளியே சென்று இருந்தனர். எனவே செயல் அலுவலர் உள்பட அதிகாரிகள் வந்துவிடுவார்கள் என சிறிது நேரம் காத்திருந்தனர். ஆனால் யாரும் வரவில்லை. இதைத்தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், பி.என்.பட்டி பேரூராட்சி அலுவலகத்தை குடிநீர் கேட்டு முற்றுகையிட்டோம். ஆனால் அதிகாரிகள் யாரும் அங்கு இல்லை. சிறிது நேரம் காத்திருந்தும் யாரும் வரவில்லை. இதனால் பின்னர் வந்து அதிகாரிகளிடம் நேரில் முறையிடலாம் என கருதி கலைந்து சென்றோம் என்று கூறினார்கள்.

Next Story