அ.தி.மு.க. அரசை கலைப்பதற்காக ஸ்டாலின், தினகரன் அமைத்த ரகசிய கூட்டணி சிதைந்து போகும் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
அ.தி.மு.க. அரசை கலைப்பதற்காக ஸ்டாலின், தினகரன் அமைத்துள்ள ரகசிய கூட்டணி சிதைந்து போகும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
மதுரை,
திருப்பரங்குன்றத்தில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் முனியாண்டிக்கு ஆதரவாக அமைச்சர் ஜெயக்குமார் நேற்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
தேர்தல் பிரசாரத்தின் போது மு.க.ஸ்டாலின் தனது கட்சியின் கொள்கையை பற்றி பேசலாம். என்ன செய்ய போகிறோம் என்று சொல்லலாம். அதை விடுத்து அனைவரையும் திட்டுகிறார். இது அவர் விரக்தியில் இருப்பதையே காட்டுகிறது. திருப்பரங்குன்றம் உள்பட அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற போவது உறுதி. ஜெயாலலிதா மரணத்தை பற்றி விசாரிக்க ஸ்டாலின் யார்?. ஏற்கனவே ஜெயலலிதா மரணம் தொடர்பாக மக்கள் உண்மை நிலையை தெரிந்து கொள்ள விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது.
ஸ்டாலின் தனது தந்தையை பற்றி பேசட்டும். ஜெயலலிதாவை பற்றி ஏன் பேசுகிறார்? ஆட்சி–கட்சி பற்றி குறை சொல்ல எதுவும் இல்லை. ஜெயலலிதாவை பற்றி பேசி அனுதாபம் தேடிக்கொள்ள பார்க்கிறார். ஆனால் அவருக்கு அனுதாபம் கிடைக்க போவதில்லை.
தினகரன், ஜெயலலிதாவின் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவேன் என்கிறார். அவரும், ஸ்டாலினும் ரகசிய கூட்டு வைத்திருக்கிறார்கள். தினகரனால் இந்த ஆட்சியை ஒன்றும் செய்ய முடியவில்லை. எனவே தான் அவர் மு.க.ஸ்டாலினுடன் கூட்டணி வைத்து கொண்டு ஆட்சியை கவிழ்க்க பார்க்கிறார். அவர்கள் 2 பேராலும் அ.தி.மு.க.வையும், ஆட்சியையும் ஒன்றும் செய்ய முடியாது. இவர்களுடைய கூட்டணி சிதைந்து போகும்.
இவ்வாறு அவர் கூறினார்.