ராஜ்பேட்டை தாலுகாவில் சம்பவம் காட்டுயானை தாக்கி விவசாயி பலி கிராம மக்கள் சாலைமறியல்- பரபரப்பு


ராஜ்பேட்டை தாலுகாவில் சம்பவம் காட்டுயானை தாக்கி விவசாயி பலி கிராம மக்கள் சாலைமறியல்- பரபரப்பு
x
தினத்தந்தி 3 May 2019 11:13 PM GMT (Updated: 3 May 2019 11:13 PM GMT)

விராஜ்பேட்டை தாலுகாவில், காட்டுயானை தாக்கி விவசாயி பலியானார். இதை யடுத்து காட்டுயானைகளின் அட்டகாசத்தை தடுக்கக்கோரி கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

குடகு,

குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகாவிற்கு உட்பட்டது ஸ்ரீமங்களா கிராமம். இந்த கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இதனால் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் இந்த கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.

இந்த நிலையில் நேற்று காலையில் ஸ்ரீமங்களா கிராமத்தைச் சேர்ந்த சோக்கேரா சுதா(வயது 42) என்ற விவசாயி அப்பகுதியில் உள்ள தனது காபித்தோட்டத்திற்கு செல்ல வீட்டில் இருந்து புறப்பட்டார்.

அவர் காபித்தோட்டத்தின் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென அங்கு ஒரு காட்டுயானை வந்தது. காட்டுயானையைப் பார்த்ததும் சோக்கேரா சுதா அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

ஆனால் அவரை விரட்டிச்சென்ற காட்டுயானை, தும்பிக்கையால் பிடித்து தூக்கி வீசியது. மேலும் அவரை காலில் போட்டு மிதித்தது. மேலும் தந்தத்தால் அவரது வயிற்றில் குத்தியது. இதில் குடல் சரிந்து ரத்த வெள்ளத்தில் சோக்கேரா சுதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் காட்டு யானை வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது.

இதுகுறித்து அறிந்த அப்பகுதி கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் காட்டுயானைகளின் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காட்டுயானையால் தாக்கப்பட்டு பலியான சோக்கேரா சுதாவின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட வேண்டும் என்றும் கோரி அவர்கள் குட்டா-ஸ்ரீமங்களா சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி அறிந்த திதிமதி வனத்துறையினரும், பொன்னம்பேட்டை போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் காட்டுயானைகளின் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும், காட்டு யானை தாக்கி பலியான சோக்கேரா சுதாவின் குடும்பத்திற்கு அரசிடம் இருந்து உரிய நிவாரண நிதி பெற்றுத் தருவதாகவும் உறுதி அளித்தனர்.

அதைதொடர்ந்து கிராம மக்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதையடுத்து வனத்துறையினர், காட்டுயானையால் தாக்கப்பட்டு பலியான சோக்கேரா சுதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி திதிமதி வனத்துறையினர் மற்றும் பொன்னம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். காட்டு யானை தாக்கி விவசாயி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Next Story