திருவாரூர் ஒன்றிய பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் கடை உரிமையாளர்களுக்கு அபராதம்


திருவாரூர் ஒன்றிய பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் கடை உரிமையாளர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 4 May 2019 11:00 PM GMT (Updated: 4 May 2019 7:15 PM GMT)

திருவாரூர் ஒன்றிய பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

திருவாரூர்,

சுற்றுச்சுழலுக்கு மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் தடை செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை வணிகர்கள் கடைபிடிக்கின்றனரா? என்பது குறித்து மாவட்ட கலெக்டர் ஆனந்த் உத்தரவின்படி திருவாரூர் அருகே மாங்குடி கடைவீதியில் வட்டார வளர்ச்சி அதிகாரி சுப்பிரமணியன் தலைமையில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜலெட்சுமி, ஊராட்சி செயலாளர் ஆனந்த் ஆகியோர் அங்குள்ள கடைகளில் ஆய்வு செய்தனர்.

ஆய்வின் போது 21 கடையில் விற்பனைக்காக வைத்திருந்த 7 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதி்ல் கடை உரிமையாளருக்கு ரூ.11 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதேபோல திருவாரூர் ஒன்றியம் சோழங்கநல்லூர், வைப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் தேவராஜன் தலைமையில், கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன் உள்ளிட்ட அலுவலர்கள் கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு செய்தனர். ஆய்வின்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை வைத்திருந்த 5 கடை உரிமையாளர்களுக்கு ரூ.3,600 அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து வட்டார வளர்ச்சி அதிகாரிகள் தேவராஜன், சுப்பிரமணியன் ஆகியோர் கூறியதாவது:-

தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வது, கொடுப்பது, பயன்படுத்துவது ஆகியவற்றிக்கு தடை விதித்துள்ளது. இதனை மீறுவோர் மீது அபராதம் மற்றும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே பொதுமக்கள், வணிகர்கள் சுற்றுச்சுழலை பாதுகாத்திட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Next Story