மன்னார்குடி அருகே மூதாட்டியை தாக்கிய தாய், மகள் கைது


மன்னார்குடி அருகே மூதாட்டியை தாக்கிய தாய், மகள் கைது
x
தினத்தந்தி 4 May 2019 10:15 PM GMT (Updated: 4 May 2019 7:19 PM GMT)

மன்னார்குடி அருகே மூதாட்டியை தாக்கிய தாய், மகளை போலீசார் கைது செய்தனர்.

சுந்தரக்கோட்டை,

மன்னார்குடி அருகே உள்ள பரவாக்கோட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜாத்தி (வயது 60). அதே பகுதியை சேர்ந்தவர் ஆசைத்தம்பி. இவருடைய மனைவி நேசமணி (55). இந்தநிலையில் நேசமணியின் மகள் சுமத்திராவுக்கும், ராஜாத்தியின் உறவினர் பிரபு என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது 2 ஆண்டுகளாக தம்பதிகளுக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ராஜாத்தி குடும்பத்திற்கும், நேசமணி குடும்பத்திற்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

தாய்,மகள் கைது

சம்பவத்தன்று இரண்டு குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் நேசமணி, சுமத்திரா ஆகியோர் ராஜாத்தியை தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவரை மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்த புகாரின் பேரில் பரவாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து நேசமணி, சுமத்திரா ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story