வறண்டு வரும் பூண்டி ஏரி


வறண்டு வரும் பூண்டி ஏரி
x
தினத்தந்தி 4 May 2019 10:15 PM GMT (Updated: 4 May 2019 7:58 PM GMT)

பூண்டி ஏரி வறண்டு வருகிறது. சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்படுகிறது. இந்த 4 ஏரிகளில் 11.05 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம்.

செங்குன்றம்,

சோழவரம், செம்பரம்பாக்கம், புழல் மற்றும் பூண்டி ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை கொண்டு சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்படுகிறது. இந்த 4 ஏரிகளில் 11.05 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று நிலவரப்படி 4 ஏரிகளிலும் வெறும் 297 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டும்தான் இருப்பு உள்ளது. இதில் பூண்டி ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படும்.

கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டு திட்டத்தின்படி ஆந்திர அரசு தமிழகத்துக்கு ஆண்டு தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும். அதன்படி ஜனவரி முதல் மார்ச் வரை 2.280 டி.எம்.சி. தண்ணீர் பூண்டி ஏரியை வந்தடைந்தது. கண்டலேறு அணையில் நீர் இருப்பு வெகுவாக குறைந்ததால் மார்ச் மாதம் 26-ந்தேதி பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு அடியோடு நிறுத்தப்பட்டது.

போதிய நீர்வரத்து இல்லாததால் பூண்டி ஏரி வறண்டு வருகிறது. பூண்டி ஏரியில் 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம்.

நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியில் வெறும் 181 மில்லியன் கனஅடி தண்ணீர்தான் இருப்பில் உள்ளது. பூண்டியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாயில் வினாடிக்கு 30 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

கோடை வெயில் காரணமாக ஏரி வறண்டு வருகிறது. நீர் இருப்பு குறைந்து வருவதால் சென்னை குடிநீர் வாரியத்துக்கு தண்ணீர் திறப்பு முழுமையாக நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Next Story