சேலம் அருகே மீண்டும் அட்டகாசம்: 2 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பெண்களிடம் நகை கொள்ளை வடமாநில கும்பல் கைவரிசை


சேலம் அருகே மீண்டும் அட்டகாசம்: 2 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பெண்களிடம் நகை கொள்ளை வடமாநில கும்பல் கைவரிசை
x
தினத்தந்தி 5 May 2019 10:45 PM GMT (Updated: 5 May 2019 6:21 PM GMT)

சேலம் அருகே 2 எக்ஸ் பிரஸ் ரெயில்களில் பெண்களிடம் மீண்டும் நகைகள் கொள்ளையடித்து வடமாநில கும்பல் கைவரிசை காட்டியுள்ளது.

சேலம், 

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மாவேலிப்பாளையம் பகுதியில் ரெயில்வே தரைப்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சேலம்-ஈரோடு ரெயில் மார்க்கத்தில் மகுடஞ்சாவடியில் இருந்து பள்ளிபாளையம் வரை ரெயில்கள் மெதுவாக இயக்கப்படுகின்றன.

இதை சாதகமாக பயன்படுத்தி வடமாநில கொள்ளை கும்பல் கடந்த 3-ந் தேதி நள்ளிரவு அந்த வழியாக சென்ற 4 ரெயில்களில் ஏறி 10 பெண்களிடம் 30 பவுன் நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடியது. ரெயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட 2-ம் வகுப்பு படுக்கை வசதியுள்ள பெட்டிகளில் மட்டும் இந்த நகை பறிப்பு சம்பவம் நடந்திருப்பது பயணிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மாவேலிப்பாளையம் வழியாக சென்ற ஆலப்புழா, சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் வடமாநில கொள்ளையர்கள் ஏறி 4 பெண்களிடம் இருந்து 7 பவுன் நகைகளை கொள்ளையடித்துவிட்டு ரெயிலில் இருந்து குதித்து தப்பி சென்றனர்.

அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட சிறப்பு காவல்படை போலீசார், கொள்ளையர்களை துரத்தினர். ஆனால் கொள்ளையர்கள் போலீஸ்காரர்கள் மீது கற்களை வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். அவர்களை பிடிக்க போலீசார் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இதுதவிர, கோவை ரெயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள், வடமாநில கொள்ளையர்களின் பட்டியலை எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தமிழ்நாடு சிறப்பு காவல்படை போலீசார் மற்றும் ரெயில்வே போலீசார் மாவேலிப்பாளையம் பகுதியில் துப்பாக்கி ஏந்தியவாறு தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story