பொள்ளாச்சி அருகே, சமையல் செய்தபோது கியாஸ் கசிந்து தீ விபத்து - படுகாயம் அடைந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை


பொள்ளாச்சி அருகே, சமையல் செய்தபோது கியாஸ் கசிந்து தீ விபத்து - படுகாயம் அடைந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 5 May 2019 10:15 PM GMT (Updated: 5 May 2019 7:30 PM GMT)

பொள்ளாச்சி அருகே சமையல் செய்தபோது கியாஸ் கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் பெண் படுகாயம் அடைந்தார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பொள்ளாச்சி,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பூசாரிபட்டியை சேர்ந்தவர் வெள்ளிங்கிரி (வயது 45), தொழிலாளி. இவருடைய மனைவி மாரியம்மாள் (38). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு மாரியம்மாள் சமையல் செய்ய கியாஸ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கியாஸ் கசிவு ஏற்பட்டு வீடு தீப்பிடித்து எரிய தொடங்கியது.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த வெள்ளிங்கிரி 2 குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு வேகமாக வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார். ஆனால் மாரியம்மாள் தீ விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் போராடி மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த விபத்தில் வீட்டில் இருந்த பீரோ, கட்டில், துணிகள் உள்பட பல்வேறு பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இதையடுத்து அப்பகுதி மக்கள் 3 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தீ விபத்தில் வீடு, உடமைகளை பறிகொடுத்த வெள்ளிங்கிரி அரசு உதவித்தொகை வழங்க வேண்டும் என வருவாய் துறையினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Next Story