தாளவாடியில் சூறாவளிக்காற்றுடன் ஆலங்கட்டி மழை; வாழைகள் முறிந்து நாசம்


தாளவாடியில் சூறாவளிக்காற்றுடன் ஆலங்கட்டி மழை; வாழைகள் முறிந்து நாசம்
x
தினத்தந்தி 5 May 2019 9:59 PM GMT (Updated: 5 May 2019 9:59 PM GMT)

தாளவாடியில் சூறாவளிக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதில் வாழைகள் முறிந்து நாசம் ஆனது.

தாளவாடி,

தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் மாலை வரை வெயில் கொளுத்தியது. மாலை 4 மணி அளவில் வானில் கருமேகங்கள் சூழ்ந்தன.

பின்னர் சூறாவளிக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இந்த மழை சுமார் 20 நிமிடம் நீடித்தது.

பலத்த சூறாவளிக்காற்று வீசியதில் தாளவாடி அருகே உள்ள ஒசூர் கிராமத்தை சேர்ந்த விவசாயியான பழனிச்சாமி என்பவரின் தோட்டத்தில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த 1,500 வாழைகள் முறிந்து நாசம் ஆனது.

கும்டாபுரம் அரசு தொடக்கப்பள்ளிக்கூடத்தில் இருந்த மரம் ஒன்று முறிந்து பள்ளியின் சுவர் மீது விழுந்தது. இதேபோல் இக்களூர், சிக்கள்ளி, தொட்டகாஜனூர், சூசைபுரம், பாரதிபுரம், பகுதிகளிலும் நேற்று மாலை ½ மணி நேரம் மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. பின்னர் குளிர்ந்த காற்று வீசியது.

இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Tags :
Next Story