ஆம்பூர் அருகே லாரி மீது கார் மோதல்; 7 பேர் சாவு சுற்றுலா வந்தபோது பரிதாபம்


ஆம்பூர் அருகே லாரி மீது கார் மோதல்; 7 பேர் சாவு சுற்றுலா வந்தபோது பரிதாபம்
x
தினத்தந்தி 6 May 2019 11:15 PM GMT (Updated: 6 May 2019 7:28 PM GMT)

ஆம்பூர் அருகே லாரி மீது கார் மோதியதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வேலூர், 

இந்த கோர விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

வேலூரில் இருந்து ஆம்பூர் நோக்கி அதிவேகமாக சென்ற கார் ஆம்பூர் அருகே உள்ள ஜமீன் என்ற இடத்தில் சாலையோரம் நின்ற ‘டிரெய்லர்’ லாரியின் பின்பக்கம் நேற்று மாலை பயங்கரமாக மோதியது.

இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கி லாரியின் அடியில் சிக்கி நின்றது. காரில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி ரத்த வெள்ளத்தில் இறந்தனர். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து அது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார், நெடுஞ்சாலை ரோந்து குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லாரியின் அடியில் சிக்கிய காரை மீட்க முயன்றனர். ஆனால் காரை அவர்களால் வெளியே எடுக்க முடியவில்லை. உடனடியாக கிரேன் வரவழைக்கப்பட்டு காரை வெளியே எடுக்க முயற்சி நடந்தது. சுமார் ½ மணி நேர போராட்டத்திற்கு பின்பு லாரியின் அடியில் இருந்த கார் சற்று வெளியே வந்தது.

இதனை தொடர்ந்து காரின் பின் சீட்டில் அமர்ந்து இருந்த, 2 ஆண்களின் உடலை போலீசார் மீட்டனர். அதில் ஒருவரது சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போனை வைத்து போலீசார் அதில் உள்ள எண்ணுக்கு தொடர்புகொண்டு விவரங்களை சேகரித்தனர்.

அதில் காரில் வந்தவர்கள் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. விபத்தில் இறந்தவர்களில் ஒருவர் மும்பை புல்சாவல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படையில் வேலை பார்க்கும் மெல்வின் தேஷ்முக் என்பதும் தெரியவந்தது. காரில் வந்த மற்றவர்கள் குறித்த முழு விவரம் ஏதும் தெரியவில்லை. இதனிடையே காருக்குள் பிணமாக கிடந்தவர்கள் வைத்திருந்த உடைமைகளையும் சேகரித்தனர். காரின் பாகங்களை உடைத்து இறந்தவர்களின் உடல்களை சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் போலீசார் மீட்டனர்.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 2 பெண்கள், ஒரு சிறுவன் உள்பட 7 பேர் இறந்து விட்டனர். அனைவரது உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் காரில் பயணம் செய்த அனைவரும் கோடைவிடுமுறையையொட்டி மராட்டிய மாநிலத்தில் இருந்து சுற்றுலா வந்தது தெரியவந்தது. பெங்களூருவில் இருந்து வேலூருக்கு வந்துவிட்டு திரும்பியபோது இவர்கள் விபத்தில் சிக்கி இறந்து உள்ளனர். இறந்த மெல்வின் தேஷ்முக் ரெயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்தவர் என்பதால் மேலும் விவரங்கள் அறிய ஜோலார்பேட்டை, காட்பாடி ரெயில்வே போலீஸ் பாதுகாப்பு படையினர் ஆம்பூருக்கு விரைந்து வந்தனர். இறந்தவர்களின் விவரங்கள் குறித்து அவர்கள் சேகரித்து வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்து நடந்த இடத்தை வேலூர் சரக டி.ஐ.ஜி. வனிதா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

காருக்குள் சிக்கியவர்களின் உடல்களை மீட்க போலீசார் கடுமையாக போராடினர். கடப்பாரையால் காரின் பாகங்களை அகற்றினர். அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் மற்றும் போலீஸ் பாலமுரளி ஆகியோருக்கு ரத்த காயம் ஏற்பட்டது.

இறந்த 7 பேர் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக போலீசார் முதலில் ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு இடவசதி இல்லாததால் அவர்களது உடல்கள் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

Next Story