களியக்காவிளை அருகே, கிணற்றில் பிணமாக கிடந்தவர் அடையாளம் தெரிந்தது


களியக்காவிளை அருகே, கிணற்றில் பிணமாக கிடந்தவர் அடையாளம் தெரிந்தது
x
தினத்தந்தி 6 May 2019 10:30 PM GMT (Updated: 6 May 2019 11:46 PM GMT)

களியக்காவிளை அருகே கிணற்றில் பிணமாக கிடந்தவர் அடையாளம் தெரிந்தது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

களியக்காவிளை,

களியக்காவிளை அருகே குறுமத்தூரில் பேரூராட்சிக்கு சொந்தமான கிணறு உள்ளது. இந்த கிணற்றில் நேற்று முன்தினம் வாலிபரின் பிணம் கிடந்தது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் குழித்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, கிணற்றுக்குள் இறங்கி பிணத்தை மீட்டு மேலே கொண்டு வந்தனர். அதே சமயம் களியக்காவிளை போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

அவர்கள் இறந்தவரின் உடலை பார்த்த போது, பல இடங்களில் ரத்த காயம் இருந்தது.

இதையடுத்து களியக்காவிளை போலீசார், பிணத்தை கைப்பற்றி குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணமாக கிடந்தவர் யார்? என்பதை கண்டுபிடிக்கும் பணியில் இறங்கினர்.

இதற்காக அந்த பகுதியில் மாயமானவர்கள் குறித்த விவரங்களை சேகரித்தனர். அப்போது, குறுமத்தூரை சேர்ந்த ஜோஸ் (வயது 32) என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாயமானது தெரியவந்தது. இவர் கூலி வேலை செய்து வந்தார். இன்னும் திருமணமாகவில்லை. மேலும் சரியாக வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்துள்ளார்.

சம்பவத்தன்று வீட்டைவிட்டு வெளியே சென்றவர் பின்பு வீடு திரும்பவில்லை. ஜோசின் பெற்றோர் அவரை தேடி வந்த நிலையில், கிணற்றில் பிணமாக கிடந்த தகவலை போலீசார் அவர்களிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது பெற்றோர், பிணத்தை பார்த்து இறந்தவர் ஜோஸ்தான் என அடையாளம் காட்டி னர். அவர் எப்படி இறந்தார்? என்ற விவரம் குறித்து தெரியவில்லை. இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story