எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.2½ கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் அசாம் மாநிலத்தை சேர்ந்த 2 பேர் கைது


எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.2½ கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் அசாம் மாநிலத்தை சேர்ந்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 8 May 2019 11:15 PM GMT (Updated: 8 May 2019 5:04 PM GMT)

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.2½ கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக அசாம் மாநிலத்தை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

இந்தோ-மியான்மர் எல்லையான மொரேவில் இருந்து தங்கக்கட்டிகள் கடத்திவரப்பட்டு, ரெயில் மூலம் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு கொண்டுவரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவின் சென்னை மண்டல அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நேற்று காலை எழும்பூர் ரெயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அசாம் மாநிலம் கக்ராஜ்கரில் இருந்து வந்த 2 பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

பின்னர் சந்தேகத்தின் பேரில் அவர்கள் அணிந்திருந்த ஆடைகளை சோதனை செய்தபோது, ஜீன்ஸ் பேண்ட்டில் தங்கக்கட்டிகளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து 2 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 7.968 கிலோ எடை கொண்ட ரூ.2.61 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் துறைமுக கன்டெய்னர் நிறுத்தத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடந்த 2-ந் தேதி அதிகாரிகள் நடத்திய சோதனையில் அட்டை பெட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.4.5 கோடி மதிப்பிலான 30 லட்சம் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கடந்த மாதம் 29-ந் தேதி சென்னை மற்றும் கிருஷ்ணாப்பட்டினம் துறைமுகத்தில் நடத்திய சோதனையில், 14 மெட்ரிக் டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story