விசைத்தறி தொழிலாளர் கூலி உயர்வு பிரச்சினை: முத்தரப்பு பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு வேலை நிறுத்தம் தொடரும் என அறிவிப்பு


விசைத்தறி தொழிலாளர் கூலி உயர்வு பிரச்சினை: முத்தரப்பு பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு வேலை நிறுத்தம் தொடரும் என அறிவிப்பு
x
தினத்தந்தி 8 May 2019 11:00 PM GMT (Updated: 8 May 2019 5:13 PM GMT)

சத்திரப்பட்டியில் மருத்துவ துணி உற்பத்தி செய்யும் விசைத்தறி தொழிலாளர்களுக்கு, கூலி உயர்வு தொடர்பாக நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வேலை நிறுத்தம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி, சங்கரபாண்டியபுரம் மற்றும் சமுசிகாபுரம் பகுதிகளில் மருத்துவ துணி உற்பத்தி செய்யும் விசைத்தறி தொழிலாளர்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்வு தொடர்பாக ஒப்பந்தம் முடிவு செய்யப் படும். கடந்த 2016– ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தப்படி 3–ம் ஆண்டு கூலி உயர்வை மருத்துவ துணி உற்பத்தியாளர்கள் முறையாக வழங்கவில்லை என குற்றம்சாட்டி கடந்த மார்ச் மாதம் விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

6 நாட்கள் நீடித்த போராட்டத்தின் முடிவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால், தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர். ஆனால் உடன்படிக்கையின் படி இது வரை 3–ம் வருட கூலி உயர்வு, விடுமுறை ஊதியம் மற்றும் புதிய கூலி உயர்வு நிர்ணயம் செய்வது தொடர்பாக, உற்பத்தியாளர்கள் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டி கடந்த 4–ந் தேதி முதல் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் அதிகாரிகள் முன்னிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், மாவட்ட தொழிலாளர் நலத்துறை அலுவலர் மலர்கொடி, தாசில்தார் ராமச்சந்திரன், கைத்தறி துறை அதிகாரி மற்றும் போலீஸ் அதிகாரிகள், மருத்துவ துணி உற்பத்தியாளர்கள், சிறு விசைத்தறி உரிமையாளர்கள்,, தொழிற் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

இதில் கடந்த மாதம் இறுதியில் சிறு விசைத்தறி உரிமையாளர்களுக்கும், மருத்துவ துணி உற்பத்தியாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட கூலி உயர்வு தொடர்பான ஒப்பந்தம் குறித்து விவாதம் நடைபெற்றது.

பேச்சுவார்த்தையின் இறுதியில், தொழிலாளர்கள் தரப்பில் கேட்ட கூலி உயர்வு குறித்து, சிறு விசைத்தறி உரிமையாளர்கள் மகா சபை கூட்டம் ஏற்பாடு செய்து அனைவரின் ஆலோசனைக்கு பின்னர் தெரிவிப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து பேச்சுவார்த்தையை அதிகாரிகள் ஒத்திவைத்தனர். இதனால் தொடர்ந்து வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.


Next Story