வீடு புகுந்து ம.தி.மு.க. நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு; தடுக்க முயன்ற மனைவி மீதும் தாக்குதல் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்


வீடு புகுந்து ம.தி.மு.க. நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு; தடுக்க முயன்ற மனைவி மீதும் தாக்குதல் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்
x
தினத்தந்தி 8 May 2019 10:30 PM GMT (Updated: 8 May 2019 6:11 PM GMT)

வீடு புகுந்து ம தி மு க நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. தடுக்க முயன்ற மனைவி மீதும் தாக்குதல் நடந்தது.

காஞ்சீபுரம்,

ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் வளையாபதி, அவைத்தலைவர் கருணாகரன், பொருளாளர் சங்கரன் ஆகியோர் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானியிடம் புகார் மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட ம.தி.மு.க. மாணவரணி துணை அமைப்பாளர் திருப்புலிவனத்தை சேர்ந்த சுரேஷ்குமார் உத்திரமேரூரில் தையல்கடை நடத்தி வருகிறார். திருப்புலிவனத்தில் உள்ள வீட்டில் சுரேஷ்குமார் குடும்பத்தினருடன் இருந்த போது, திருப்புலிவனத்தை சேர்ந்த பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பாலாஜி என்பவர் அவரை அரிவாளால் வெட்டியுள்ளார். இதை தடுக்க முயன்ற சுரேசின் மனைவியையும் அவர் தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயம் அடைந்த சுரேஷ்குமாரை அந்த பகுதி மக்கள் மீட்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பாலாஜி மீது உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் இருசக்கர வாகன திருட்டு, கஞ்சா விற்பனை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.

மேலும் பாலாஜியுடன் இந்த வழக்கில் அஜித்குமார், சரவணன் ஆகியோர் சதி ஆலோசனையில் ஈடுபட்டதாக தெரிய வருகிறது. ம.தி.மு.க. மாணவரணி நிர்வாகியான சுரேசுக்கு எந்தவிதமான முன்பகையும் கிடையாது.

எனவே இந்த சம்பவத்தில் வேறு யாராவது சம்பந்தப்பட்டுள்ளார்களா? என்று புலன் விசாரணை செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியுள்ளனர்.

விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உறுதி அளித்தார்.

Next Story