நெல்லையில் பரபரப்பு: கால்பந்து பயிற்சியாளர் மர்மசாவு வீட்டின் படுக்கை அறையில் பிணமாக கிடந்தார்

நெல்லையில் கால்பந்து பயிற்சியாளர் மர்மமான முறையில் வீட்டின் படுக்கை அறையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை,
நெல்லையில் கால்பந்து பயிற்சியாளர் மர்மமான முறையில் வீட்டின் படுக்கை அறையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கால்பந்து பயிற்சியாளர்
ராமநாதபுரத்தை சேர்ந்தவர் அமல்ராஜ் (வயது 54). இவர், இந்திய விமான படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அண்ணா விளையாட்டு மைதானத்தில் கால்பந்து பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி நொய்லின் ஜான், ஈரோட்டில் விளையாட்டு அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.அமல்ராஜ், பாளையங்கோட்டை கோரிபள்ளத்தில் தனியாக வீடு எடுத்து தங்கி பணிக்கு சென்று வந்தார். அவர் நேற்று முன்தினம் வேலைக்கு வரவில்லை. அமல்ராஜ் செல்போனை அவரது மகன் தொடர்பு கொண்டார். ஆனால், அவர் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மகன் மற்றொரு பயிற்சியாளர் குமரன் என்பவருக்கு தகவல் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து நள்ளிரவில் குமரன், அமல்ராஜ் தங்கி இருந்த வீட்டுக்கு சென்றார். வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. மேலும் உள்ளே இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த குமரன் பாளையங்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
மர்மசாவு
சம்பவ இடத்துக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு அமல்ராஜ் படுக்கை அறையில் இருந்த கட்டிலில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். அவரது வாயில் இருந்தும், மூக்கில் இருந்தும் ரத்தம் வடிந்திருந்தது. அவரது உடலை போலீசார் மீட்டு பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது.
போலீசார் விசாரணை
இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அமல்ராஜின் மனைவி நொய்லின் ஜான், மகன் மற்றும் உறவினர்கள் நெல்லை வந்தனர். அவர்கள் அமல்ராஜின் உடலை பார்த்து கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கால்பந்து பயிற்சியாளர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story






