சிதம்பரத்தில், பணம் கேட்டு மிரட்டி வியாபாரி மீது தாக்குதல் - 6 பேர் கைது


சிதம்பரத்தில், பணம் கேட்டு மிரட்டி வியாபாரி மீது தாக்குதல் - 6 பேர் கைது
x
தினத்தந்தி 8 May 2019 10:45 PM GMT (Updated: 8 May 2019 8:43 PM GMT)

சிதம்பரத்தில் பணம் கேட்டு மிரட்டி வியாபாரியை தாக்கிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிதம்பரம்,

சிதம்பரம் பொன்னம்பலம் நகரை சேர்ந்தவர் ராமநாதன்(வயது 42). இவர் சிதம்பரம் பகுதியில் உள்ள கடைகளுக்கு குளிர்பானம் விற்பனை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு ராமநாதன் தனது வீட்டில் மினி லாரியில் இருந்து குளிர்பான பாட்டில்களை இறக்கி கொண்டிருந்தார்.

அப்போது சிதம்பரம் சிவசக்தி நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன்கள் புருஷோத்தமன்(26), சுந்தர்ராஜன்(22), ஓமகுளம் பன்னீர் செல்வம் மகன் முரளி(30), சிதம்பரம் செங்கட்டான் தெருவை சேர்ந்த கணேசன் மகன் பரணிதரன்(28), மணி(53), சுப்புரமணி மகன் சூரியமுர்த்தி(26) ஆகியோர் அங்கு வந்தனர்.

தொடர்ந்து அவர்கள் ராமநாதனிடம் தங்களுக்கு பணம் வேண்டும் என்று கேட்டனர். அதற்கு அவர் தன்னிடம் பணம் எதுவும் இல்லை, நான் எதற்கு உங்களுக்கு பணம் தர வேண்டும், தர முடியாது என்று கூறியுளளார்.

இதனால் ஆத்திரமடைந்த 6 பேரும் சேர்ந்து ராமநாதனை உருட்டு கட்டை, இரும்பு கம்பியால் தாக்கினர். மேலும் அவரது மினி லாரியையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். ராமநாதன் காயத்துடன் கிடப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் புருஷோத்தமன் உள்பட 6 பேர் மீதும் சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்கு பதிவு செய்து, அவர்கள் அனைவரையும் கைது செய்தார்.

Next Story