தஞ்சையில், காதல் திருமணம் செய்த பெண் சாவு - வரதட்சணை கொடுமையா? உதவி கலெக்டர் விசாரணை
தஞ்சையில் காதல் திருமணம் செய்த பெண் இறந்தார். வரதட்சணை கொடுமையா? என உதவி கலெக்டர் சுரேஷ் விசாரணை நடத்தி வருகிறார்.
தஞ்சாவூர்,
தஞ்சை ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் இளந்தமிழன். டிரைவர். இவருடைய மனைவி ஆர்த்தி(வயது25). ஒரத்தநாடு தாலுகா பின்னையூர் கிராமம் தான் இளந்தமிழனின் சொந்த ஊராகும். பட்டுக்கோட்டையில் இருந்து வேதாரண்யத்திற்கு சென்று வந்த தனியார் பஸ்சில் இளந்தமிழன் டிரைவராக பணி புரிந்தபோது வேதாரண்யம் அருகே மருதூரை சேர்ந்த ஆர்த்தியுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர்.
இந்த காதல் விவகாரம் ஆர்த்தியின் பெற்றோருக்கு தெரியவந்ததால் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்பை மீறி ஆர்த்தியும், இளந்தமிழனும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் தஞ்சை ராம கிருஷ்ணாபுரத்தில் குடியேறினர். இந்தநிலையில் குடி பழக்கத்திற்கு ஆளான இளந்தமிழன் குடிபோதையில் அடிக்கடி ஆர்த்தியுடன் தகராறு செய்து வந்தார். இதனால் ஆர்த்தி மனஉளைச் சலுக்கு ஆளாகி இருந்தார்.
கடந்த 3-ந் தேதி எலி மருந்தை(விஷம்) தின்ற நிலையில் ஆர்த்தி வீட்டில் மயங்கி கிடந்தார். தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் ஆர்த்தி இறந்தார். இது குறித்து தஞ்சை தெற்கு போலீசார் விசாரணை நடத்தி சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருமணமாகி 15 மாதங்களில் ஆர்த்தி இறந்துள்ளதால் வரதட்சணை கொடுமை காரணமா? என தஞ்சை உதவி கலெக்டர்(ஆர்.டி.ஓ.) சுரேஷ் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story