துறையூரில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் 10 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் திருட்டு


துறையூரில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் 10 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 9 May 2019 10:15 PM GMT (Updated: 9 May 2019 8:15 PM GMT)

துறையூரில் ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் 10 பவுன் நகை, ரூ.1 லட்சத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர்.

துறையூர், 

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

துறையூரில் ஆத்தூர் சாலையில் வசித்து வருபவர் சேகர்(வயது 65). காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு கோவையில் உள்ள உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டார். இந்தநிலையில் நேற்று காலை சேகர் வீட்டின் கதவு திறந்து கிடந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி சேகருக்கு தகவல் கொடுத்தனர். உடனே அவர் கோவையில் இருந்து புறப்பட்டு வீட்டுக்கு வந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்த போது, வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது.

அதில் இருந்த 10 பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.65 ஆயிரம் மற்றும் பூஜை அறையில் இருந்த ரூ.35 ஆயிரம் ஆகியவை திருட்டு போயிருந்தது. உடனே அவர் இதுபற்றி துறையூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், சேகர் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் நேற்று முன்தினம் சேகர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்ததும், பின்னர் அவர்கள் வீட்டில் பீரோவை உடைத்து அதில் இருந்த நகைகள், வெள்ளி பொருட்கள், ரூ.1 லட்சம் ஆகியவற்றை திருடிச்சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம ஆசாமிகளை தேடிவருகிறார்கள். ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டிலேயே நகை, பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Next Story