தினத்தந்தி-வி.ஜி.பி. நடத்தும் கோடை விழாவில் நாளை, பாட்டுப்போட்டி வெற்றி பெறுபவர்களுக்கு விதவிதமான பரிசுகள்


தினத்தந்தி-வி.ஜி.பி. நடத்தும் கோடை விழாவில் நாளை, பாட்டுப்போட்டி வெற்றி பெறுபவர்களுக்கு விதவிதமான பரிசுகள்
x
தினத்தந்தி 10 May 2019 10:15 PM GMT (Updated: 10 May 2019 6:34 PM GMT)

தினத்தந்தி-வி.ஜி.பி. இணைந்து நடத்தும் கோடை விழாவில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாபெரும் பாட்டுப்போட்டி நடக்கிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு விதவிதமான பரிசுகள் வழங்கப்பட இருக்கின்றன.

சென்னை,

தினத்தந்தியும், வி.ஜி.பி.யும் இணைந்து தங்கள் வாசகர்களுக்காகவும், வாடிக்கையாளர்களுக்காகவும் ஒவ்வொரு வருடமும் வி.ஜி.பி. தங்க கடற்கரையில் ‘கோடை விழா’ என்ற பெயரில் பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான கோடை விழா கொண்டாட்டம் தொடங்கி, நடந்து வருகிறது.

மூன்றாவது வார நிகழ்ச்சியாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு வி.ஜி.பி. தங்க கடற்கரையில் உள்ள புல்வெளியில் மாபெரும் பாட்டுப்போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் 10 முதல் 30 வயது வரை உள்ள இருபாலரும் கலந்து கொள்ளலாம். நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்கள் மேடையில் இசைக்குழுவின் முன்பு பாடி தங்கள் இசைத் திறனை வெளிப்படுத்த வேண்டும்.

போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுகிறவர்களுக்கு முதல் பரிசு எல்.ஈ.டி. கலர் டி.வி, இரண்டாம் பரிசு பிரிட்ஜ், மூன்றாம் பரிசு ஆடியோ சிஸ்டம் வழங்கப்படும். போட்டியில் கலந்து கொள்கிறவர்களில் ஏராளமானவர்களுக்கு ஆறுதல் பரிசும் உண்டு.

போட்டியில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் வி.ஜி.பி. தங்க கடற்கரையில் அமைந்துள்ள கவுண்டரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1 மணிக்குள் தங்கள் பெயர்களை பதிவு செய்திட வேண்டும். பாட்டுப்போட்டிக்கு பிரபல பாடகி பாம்பே சாரதா நடுவராக இருந்து பரிசுக்குரியவர்களை தேர்ந்தெடுத்து, பரிசுகளை வழங்குவார்.

அடுத்த ஞாயிற்றுக்கிழமை (19-ந்தேதி) விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக நடனப் போட்டி நடக்க இருக்கிறது. இதில் 15 முதல் 25 வயது வரையுள்ள ஆண்களும், பெண்களும் கலந்து கொள்ளலாம். போட்டியில் கலந்து கொள்கிறவர்களுக்கு நுழைவுக்கட்டணம் திரும்பத்தரப்படும். ஒவ்வொரு போட்டியில் வெல்பவர்களுக்கும் மேற்கண்ட பரிசுகள் உண்டு.

Next Story