ஆந்திர மாநிலத்தில் தொழிலாளி சாவு: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் திருப்பத்தூர் அருகே பரபரப்பு


ஆந்திர மாநிலத்தில் தொழிலாளி சாவு: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் திருப்பத்தூர் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 10 May 2019 10:45 PM GMT (Updated: 10 May 2019 7:59 PM GMT)

ஆந்திர மாநிலத்தில் மின்டவர் அமைக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதனால் அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர், 

திருப்பத்தூர் அருகே உள்ள கொடுமாம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 40). தொழிலாளியான இவர் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் மின்கம்பங்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று பணியில் ஈடுபட்டிருந்த சண்முகம் 50 அடி உயர டவரில் இருந்து கீழே விழுந்து இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று முன்தினம் சண்முகத்தின் உடலை டவர் அமைக்கும் ஒப்பந்ததாரர்கள் அவரது சொந்த ஊருக்கு எடுத்து வந்தனர்.

அப்போது சண்முகத்தின் உறவினர்கள் அவர்களை முற்றுகையிட்டு, ஆந்திர மாநில போலீசுக்கு தகவல் அளிக்கவில்லை, பிரேத பரிசோதனை ஏன் செய்யவில்லை, அவசரம், அவசரமாக உடலை கொண்டு வர காரணம் என்ன? தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு காரணம் இருக்கிறதா? என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் உரிய நடவடிக்கை எடுக்கும்வரை உடலை வாங்க மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அங்கு வந்த திருப்பத்தூர் தாலுகா போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஆந்திர மாநில போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அதன்பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து, ஆந்திர மாநில போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர் என திருப்பத்தூர் போலீசார் கூறினர். அதன்பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story