ஆயில்ய நட்சத்திரத்தையொட்டி நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்


ஆயில்ய நட்சத்திரத்தையொட்டி நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்
x
தினத்தந்தி 12 May 2019 10:30 PM GMT (Updated: 12 May 2019 2:46 PM GMT)

ஆயில்ய நட்சத்திரத்தையொட்டி நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் நாகர் சிலைகளுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர்.

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையன்றும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். நேற்று ஆயில்ய நட்சத்திரம் ஆகும். எனவே ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நாகராஜா கோவிலுக்கு வழிபாடு நடத்த வந்தனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

அதிகாலை 4 மணியில் இருந்தே குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கோவிலுக்கு வரத் தொடங்கினர்.

அண்டை மாவட்டங்களில் இருந்தும், கேரளாவை சேர்ந்தவர்களும் ஏராளமானவர்கள் நாகராஜா கோவிலுக்கு வந்திருந்தனர். பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு பால் அபிஷேகம் செய்தும், மஞ்சள் பொடி தூவியும் வழிபாடு நடத்தினர். அதைத் தொடர்ந்து அங்கு அரச மரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகரை தரிசனம் செய்துவிட்டு நாகராஜரை வணங்கச் சென்றார்கள். ஆயில்ய நட்சத்திரத்தையொட்டி நாகராஜருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

இந்த பூஜைகளில் ஆண்களும், பெண்களும் திரளாக பங்கேற்றனர். அதைத் தொடர்ந்து சிவன், அனந்த கிருஷ்ணர் ஆகிய சாமிகளை பக்தர்கள் வணங்கினார்கள்.

அதோடு அருகே உள்ள சன்னதியில் குடிகொண்டிருக்கும் துர்க்கை அம்மன் மற்றும் முருகனையும் பக்தர்கள் கும்பிட்டனர். மக்கள் வருகையையொட்டி நாகராஜா கோவில் வளாகத்திலும், வெளிப்புறத்திலும் நிறைய கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. அந்த கடைகளில் பால் மற்றும் மஞ்சள் பொடி விற்பனை அமோகமாக நடந்தது.

கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்ததையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story