செந்துறை அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் போராட்டம்


செந்துறை அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் போராட்டம்
x
தினத்தந்தி 12 May 2019 11:00 PM GMT (Updated: 12 May 2019 6:02 PM GMT)

செந்துறை அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செந்துறை,

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள பொன்பரப்பியில் கடந்த பல ஆண்டுகளாக அரசு டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனை தொடர்ந்து அந்த கடையை மூடிய டாஸ்மாக் நிர்வாகம் பொன்குடிக்காடு கிராமத்தில் உள்ள விவசாய நிலப்பகுதியில் புதிய கடை திறக்க முயற்சி செய்தது. அதனை அப்பகுதி பெண்கள் போராட்டம் நடத்தி மூடினார்கள். அந்த போராட்டத்தை தொடர்ந்து அருகே உள்ள சிறுகளத்தூர் கிராமத்தில் அப்போது மக்களின் எதிர்ப்பையும் மீறி விவசாய நிலத்தில் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.


இந்த நிலையில் நேற்று மதியம் திடீரென டாஸ்மாக் கடை முன்பு திரண்டு அப்பகுதி பெண்கள் டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு இளஞ்செழியன், செந்துறை போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விரைந்து வந்து போராட்டக்காரர்களை தடுக்க முயன்றனர். ஆனால் அதையும் மீறி டாஸ்மாக் கடை முன்பு திரண்ட பெண்கள் டாஸ்மாக் கடையை சூறையாட முயன்றனர். பெண்களின் ஆவேச போராட்டத்தை தொடர்ந்து டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில், இந்த டாஸ்மாக் கடையால் தான் பொன்பரப்பியில் கலவரம் ஏற்பட்டது. இப்பகுதி பெண்கள் இரவு நேரங்களில் நடமாட முடியவில்லை. விவசாய நிலங்களுக்கு செல்ல முடியவில்லை.

விவசாய பகுதிகளில் ஆங்காங்கே மதுப்பிரியர்கள் குடித்து விட்டு பாட்டிலை அங்கேயே போட்டு உடைப்பதோடு அங்கு வரும் பெண்களையும் ஆபாசமாக பேசுகின்றனர். இந்த கடை வந்த பின்னர் இப்பகுதியில் 10–க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மதுவால் உயிரிழந்துள்ளனர். ஆகையால் இந்த டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும். இல்லை என்றால் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்துவிட்டு கலைந்து சென்றனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story