நெல்லை அருகே பரபரப்பு: புது வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகள் வெடித்தன அண்ணன்-தம்பிக்கு வலைவீச்சு

நெல்லை அருகே புது வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக அண்ணன், தம்பியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நெல்லை,
நெல்லை அருகே புது வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக அண்ணன், தம்பியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பயங்கர வெடி சத்தம்
நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள மேலப்பாட்டம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 55), விவசாயி. இவர் அந்த பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். முழுமையாக கட்டி முடிக்கப்படாததால் அந்த வீட்டில் யாரும் குடியேறவில்லை. நேற்று முன்தினம் இரவு வீட்டின் பின்பகுதியில் இருந்து 2 முறை பயங்கர வெடி சத்தம் கேட்டது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அங்கு சென்று பார்த்தனர்.
அப்போது அந்த வீட்டின் பின்பக்க கதவு, சமையல் அறை ஆகியவை சேதமடைந்து இருந்தன. ஜன்னல் கண்ணாடி உடைந்திருந்தது. தகவல் அறிந்த நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார், போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்னரசு, இன்ஸ்பெக்டர் ரகுபதி ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
நாட்டு வெடிகுண்டுகள்
விசாரணையில், அந்த வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 2 நாட்டு வெடிகுண்டுகள் வெடித்து சிதறியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த இடத்தில் வெடித்து சிதறிக்கிடந்த வெடிகுண்டு துகள்களை போலீசார் சேகரித்தனர். பின்னர் அவை பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
மேலும் அந்த பகுதியில் வேறு ஏதேனும் வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதா? என போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர். வெடிகுண்டு கண்டுபிடிக்கும் மோப்ப நாய்கள் மூலமும் ஆய்வு செய்யப்பட்டது. ஆனால், அங்கு வேறு எந்த வெடிகுண்டுகளும் சிக்கவில்லை.
திடுக்கிடும் தகவல்
போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. கணேசனுக்கு சிவா என்ற நாராயணன், அருள் என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகி ஒருவரின் ஆதரவாளர்கள் ஆவர். இவர்கள் மீது கொலை வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.
இதனால் அவர்கள் தங்கள் பாதுகாப்புக்காக நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்து இருந்தார்களா? அல்லது வேறு யாரையாவது கொலை செய்ய பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததா? என்று போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவா என்ற நாராயணன், அவருடைய தம்பி அருள் ஆகியோரை வலைவீசி தேடி வருகிறார்கள். வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த நாட்டு வெடிகுண்டுகள் வெடித்து சிதறிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story






