தமிழகத்தில் மாநில சுயாட்சியின் கீழ் தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி அரவக்குறிச்சியில் வைகோ பேச்சு


தமிழகத்தில் மாநில சுயாட்சியின் கீழ் தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி அரவக்குறிச்சியில் வைகோ பேச்சு
x
தினத்தந்தி 12 May 2019 11:00 PM GMT (Updated: 12 May 2019 7:52 PM GMT)

நீட் தேர்வு உள்ளிட்டவற்றில் பறிபோன உரிமைகளை மீட்டெடுக்க தமிழகத்தில் மாநில சுயாட்சியை முன்னிலைப்படுத்தி தி.மு.க. ஆட்சி அமையும் என அரவக்குறிச்சியில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ பேசினார்.

அரவக்குறிச்சி,

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக வி.செந்தில்பாலாஜி போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு கேட்டு நேற்று அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட வெஞ்சமாங்கூடலூர், ஈசநத்தம், ஆண்டிபட்டிக்கோட்டை, பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி, சின்னதாராபுரம் ஆகிய இடங்களில் திறந்தவேனில் நின்றபடி ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

தளபதி வீட்டு வசதி திட்டத்தின்கீழ் உதயசூரியன் நகரில், வறுமையில் வாடுவோர், ஒரு குடிசைக்குள் 3 குடும்பங்களாக நெருக்கடியில் வசிப்பவர்கள் உள்ளிட்டோரை கணக்கெடுத்து 25 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா 3 சென்ட் நிலம் வழங்கி வீடு கட்டித்தர ஏற்பாடு செய்யப்படும் என்கிற செந்தில்பாலாஜியின் திட்ட அறிவிப்பு வரவேற்கதக்கது ஆகும். அதனை மு.க.ஸ்டாலின் வழிமொழிந்திருப்பதால், தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மக்களுக்கு வீடு கட்டித்தரப்படுவது உறுதி.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தற்போது கூட வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் திணிக்கின்றனர். இதையெல்லாம் கருத்தில் கொண்டு நாட்டு மக்களுக்கு எதிரான மோடி ஆட்சி மத்தியில் தூக்கி எறியப்படும். முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட மோடி ஆட்சி பச்சை கொடி காட்டியிருக்கிறது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டி தஞ்சை தரணி உள்பட காவிரி டெல்டாவை பஞ்ச பகுதிகளாக மாற்ற அவர்கள் முயற்சிக்கின்றனர். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நகர்த்துகின்ற அரசியல் சதுரங்க காய்களை பொறுத்து, மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது தமிழகத்தில் மக்கள் விரோத திட்டங்களை தட்டி கேட்க முடியாமல் திராணியில்லாமல் உள்ள எடப்பாடி பழனிசாமி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும்.

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை நிலவுவதை பார்க்க முடிகி றது. அந்த பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எதிர்கால வாழ்க்கை என்ன? என்பதே கேள்விக்குறியாக உள்ளது. இதே போல் குழந்தைகளை விற்பனை செய்வது பற்றிய செய்தி என்பது, நினைத்து பார்க்கவே நெஞ்சம் வெடித்து விடும் போல் இருக்கிறது. ரூ.10 ஆயிரம், ரூ.20 ஆயிரம், ரூ.30 ஆயிரம் என குழந்தைகளை விலைக்கு வாங்கி லட்சக்கணக்கில் விற்கின்ற கொடுமை நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அரங்கேறி இருக்கிறது. அந்த குழந்தைகளின் நிலைமை என்ன? அவர்களை பிச்சை எடுக்கக்கூட பயன்படுத்தலாம். இதையெல்லாம் பார்க்கும் போது சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதை உணர முடிகிறது.

மருத்துவம் படிக்க விரும்பும் தமிழக மாணவ, மாணவிகளுக்கு நீட் தேர்வு பெரும் சவாலாக உள்ளது. நீட் தேர்வு எழுதபோகிற இடத்தில், மாணவிகள் காதிலே போட்டிக்கிற கம்மலை கழற்ற சொல்கிறார்கள். அதில் என்ன கம்ப்யூட்டரா வைத்திருக்க முடியும். இதைவிட அந்த பெண் வெட்கி தலை குனியும் படி துப்பட்டாவை எடுத்து சோதனை போட்டிருக்கிறார்கள். தேர்வு எழுதப்போகும் போது அனைவருக்கும் பதற்றம் இருக்கும். நானும் கல்லூரிகளிலே தேர்வு எழுதியவன் தான். தேர்வில் தெரிந்த கேள்விகள் வருமா? என பல சிந்தனைகளில் செல்வோம். ஆனால் நீட் தேர்வு எழுத செல்வதற்கு முன்னரே, இப்படி சோதனை போட்டால் அவர்கள் எப்படி பதற்றமின்றி தேர்வெழுத முடியும். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு, டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதபோகிறவர்களுக்கு சோதனை செய்கிறார்களா? என்றால் இல்லை.

இடைத்தேர்தலில் 22 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். ஸ்டாலின் முதல்-அமைச்சராவார். அது அண்ணா, கருணாநிதி வழியில் ஸ்டாலின் முன்னெடுத்து செல்கிற மாநில சுயாட்சியாக தான் இருக்கும். மத்தியிலும் ஆட்சி மாற்றம் உறுதி எனும்போது நீட் உள்ளிட்டவற்றில் பறிபோன தமிழக உரிமைகள் மீட்கப்படுவது உறுதி. நீட் தேர்வு ரத்து செய்யப்படும். கேபிள் டி.வி. கட்டணம், கியாஸ் சிலிண்டர் உயர்வு ஆகியவற்றால் மக்கள் படும் அவதி தீர்க்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தநிலையில் பள்ளப்பட்டி ஷாநகரில் திறந்த வேனில் வைகோ பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த பள்ளிவாசலில் தொழுகைக்கான அறிவிப்பு ஒலிக்கத்தொடங்கியது. உடனே வைகோ தனது பேச்சை நிறுத்தினார். அறிவிப்பு முடிந்த பின்னர் அவர் மீண்டும் தனது பேச்சை தொடங்கினார். 

Next Story