புதுப்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி

புதுப்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலியானார்.
புதுப்பேட்டை,
புதுப்பேட்டை அடுத்துள்ள கரும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள். இவருடைய மகன் சேட்டு (வயது 40), விவசாயி. இவர் அதே பகுதியில் உள்ள ஒருவரது நிலத்தை குத்தகைக்கு எடுத்து கரும்பு பயிரிட்டு இருந்தார். இதையடுத்து இவர் தினமும் அந்த நிலத்திற்கு சென்று தண்ணீர் பாய்ச்சி விவசாய பணியில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல சேட்டு நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். அப்போது வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை அவர் எதிர்பாராதவிதமாக மிதித்தார். இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதை அறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் விரைந்து வந்து சேட்டுவின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதற்கிடையே இது பற்றி தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் சேட்டு வின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story






