நாகர்கோவிலில் நள்ளிரவில் மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிப்பு


நாகர்கோவிலில் நள்ளிரவில் மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிப்பு
x
தினத்தந்தி 12 May 2019 10:45 PM GMT (Updated: 12 May 2019 8:46 PM GMT)

நள்ளிரவில் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. அந்த சமயத்தில் யாரோ மர்ம நபர்கள் அங்கு வந்து குமாரின் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது.

நாகர்கோவில்,

நாகர்கோவில் வடிவீஸ்வரம் அண்ணா நகரை சேர்ந்தவர் குமார் (வயது 40), பெயிண்டர். இவர் நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன் நிறுத்திவிட்டு தூங்கச் சென்றார். நள்ளிரவில் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. அந்த சமயத்தில் யாரோ மர்ம நபர்கள் அங்கு வந்து குமாரின் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது. சத்தம் கேட்டு குமார் மற்றும் உறவினர்கள் வெளியே ஓடிவந்தனர். மோட்டார் சைக்கிள் தீயில் எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

பின்னர் இதுபற்றி கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். ஆனால் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த மர்ம நபர்கள் பற்றிய விவரம் தெரியவில்லை. இதனால் சம்பவம் நடந்த இடத்தின் அருகே எங்கேனும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளதா? என்று போலீசார் ஆய்வு நடத்தி வருகிறார்கள். நள்ளிரவில் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story